பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், மார்ச் 29, 2012

காசி ஆனந்தன் கவிதைகள் !!

நிலாவே!

காசி ஆனந்தன்
நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!

வான் முகிலே!

காசி ஆனந்தன்
இடிக்கின்றாய்.... வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?

கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?
சிரிக்கின்றாய்...மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?

ஓடிப்போ...!ஓடிப்போ...!
புதுக் கவிதை

வான்முகிலே....ஓவென்று
முழக்கமிட்டுப்
பாடிப்போ! அதிரட்டும்
மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

செருக்களம் வா!

காசி ஆனந்தன்
மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு

சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?

கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

காதலியே!

காசி ஆனந்தன்
காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம்உன் செவ்வாய்கேதான்!

கலங்கரை

காசி ஆனந்தன்
முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை - நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?
அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!
ஓடு தூக்குதே! - இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே!
மாற்றார் தலைதனில் ஏற்றினாய்
கல்லை! வாட்டினாய்! - இன்று
மூட்டை சுமந்து நடக்கிறாய்!
தாழ்ந்து கிடக்கிறாய்!
ஆதியில் மாடம் அமைத்தவர்
வாழ்வு சமைத்தவர் - அட
வீதியில் காலம் கழிப்பதோ?
நால்வர் பழிப்பதோ?
"முல்லைக்குத் தேரை வழங்கினோம்"
என்று முழங்கினோம்! - இங்கே
பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!
தருவார் யாரடா?

நறுக்குகள் - விளம்பரம்

காசி ஆனந்தன்

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை..

தொலைக்காட்சியில்.

நறுக்குகள் - அறுவடை

காசி ஆனந்தன்
சுவரொட்டியை
தின்ற கழுதை
கொழுத்தது.
பார்த்த கழுதை
புழுத்தது.

நறுக்குகள் - மானம்

காசி ஆனந்தன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

நறுக்குகள் - மனிதன்

காசி ஆனந்தன்
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
"பசு பால் தரும்"
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.
இப்படியாக
மனிதன்...

குமுறல்

காசி ஆனந்தன்
செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?

குரல் நிறுத்திய குயில்

காசி ஆனந்தன்
கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை
கனலாய் வாழ்ந்த தமிழன்
எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்
எழுச்சிப் புலவன் வீரம்
பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்
பாயும் புயலாய் எம்மை
இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
போற்றப் பிறந்த களத்தின் பொருநன்
புன்மை உற்றிழந்த எம் வாழ்வை
மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்
மறந்திகழ் இனப்போர் மண்ணில்
ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்
ஆரியர் நெஞ்சில் கூர்வாள்
ஏற்றப் பிறந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
பீடு படைத்த புலவன் மதத்தைப்
பிளந்த சூறைக் காற்று
கேடு படைத்த மடமைக் குப்பைக்
கிடங்கை எரித்த நெருப்பு
நாடு படைத்த நல்லறி வாளன்
நஞ்சர் நெஞ்சை நொறுக்கி
ஏடு படைத்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
மனத்தை வளர்த்த மாந்தர் நேயன்
மண்ணில் நாளும் மண்டைக்
கனத்தை வளர்த்த வல்லாண் மையினர்
கழுத்தை முறித்தோன்! அடிமைத்
தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும்
தறித்த போர்வாள்! மாந்தர்
இனத்தை வளர்த்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

பிடி சாபம்!

காசி ஆனந்தன்
கன்னெஞ்சர் சிங்களத்தர்
கயவர் என் தமிழ்ஈழத்தை
அன்னை மண்ணைச் செந்தீயால்
அழித்தார் என்றெழுந்த சேதி
மின்னலாய்த் தாக்கிற்றம்மா...
விம்மிநின் றழுகின்றேன் யான்!
என்கண்ணில் நீரா? இல்லை!
இதுவும் தீ! இதுவும் தீயே!
யாழ்நகர் நல்லறங்கள்
யாவிலும் ஊறி மக்கள்
வாழ்நகர் தமிழர் வாழ்வில்
வற்றாத கல்வி மேன்மை
சூழ்நகர் கொடியர் தீயில்
துகள் சாம்பலாகி அந்தோ
பாழ்நகர் ஆன தென்றார்!
பதறுதே தமிழ் நெஞ்சம்!
வீடுகளெல்லாம் தீயால்
வீழ்த்தினார்! கடைகளெல்லாம்
கேடுற நெருப்பு வைத்தார்!
கீழ்மன வெறியர் எங்கள்
பீடுறு யாழ்மா நாட்டின்
பெரியநூல் நிலைய மீதும்
போடுசெந் தீயை என்றார்...!
பொன்னூல்கள் எரித்தார்! சென்றார்!
அம்மம்மா! என்ன சொல்வேன்?
அனலிலே கம்பன் மாண்டான்!
இம்மா நிலம் வணங்கும்
இனியவள் ளுவன் மடிந்தான்!
"உம்"மென எழுந்த தீயில்
உயர் தமிழ் இளங்கோ செத்தான்!
செம்மனப் புலவ ரெல்லாம்
செந்தீயில் வெந்தா ரம்மா!
கொடுந்தீயே! சிங்களத்தின்
கொடுந்தீயே! இது நீ கேளாய்!
நெடுங்காலம் நின்றன் கொட்டம்
நில்லா! இப்புலவன் உன்மேல்
இடுஞ்சாபம் இன்றே ஏற்பாய்!
இருந்துபார்! நீஇம் மண்ணில்
படும்பாடு நாளை பார்ப்பேன்...!
பார்த்தே நான் உலகு நீப்பேன்!

தம்பிகாள்!

காசி ஆனந்தன்
வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம்
வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்!
தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே!
தெய்வம் உண்டு நம்புங்கள்!
பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!
போர்க்களம் எமக்கென்ன புதிதோ?
குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!
கூத்தாடுவோம்! இது பொன்னாள்!
எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள்
இருட்சிறை ஆடுதல் இன்பம்!
வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து
வெல்லுதல் விடுதலை கண்டீர்!
சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்!
செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ?
வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்!
வைர நெஞ்சங்களோ வாழி!
ஆழமா கடலின் அலைகளே இருங்கள்!
அறம் காத்தல் நம்கடன் அன்றோ?
கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம்
குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்!
ஈழமா மண்ணில் எழில் விடுதலை நாள்
இருத்தாமல் நாம் மடிவோமா?
ஊழையும் வெல்லும் உளங்களே! இருங்கள்!
ஒருபெருஞ் செயல் செயப் பிறந்தோம்!
கொள்ளையாம் வீரம் கொந்தளித்தாடும்
குட்டுவன் தமிழ்க்குலச் சேய்காள்!
உள்ளம் மகிழ இசை ஓதுமின்கள்!
உவகையில் ஆடிக் களிப்பீர்!
பிள்ளைகளா பெற்றாள்? எமைப் பெற்றாள்
பெருமைகள் அல்லவா பெற்றாள்?
வெள்ளம் படைப்போம்! புயல்படைப்போம்! நாம்
விடுதலை படைப்போம்! இருங்கள்!
நெடும்போர் ஆடும் நிமிர்ந்த உயிர்களே!
நெருப்பினில் பூத்த நெஞ்சங்காள்!
கொடுங்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே!

குயிலுக்கு வாழ்வு கொடு

காசி ஆனந்தன்
இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?
நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?
உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?
உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!

தமிழ்க் கன்னி தோற்றம்

காசி ஆனந்தன்
எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்.... 

களம் புகுவாய்!

காசி ஆனந்தன்
மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!

இனமானப் புலி எங்கே?

காசி ஆனந்தன்
இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
"பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

எக்களிப்பு

காசி ஆனந்தன்
குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!

படை இளைப்பாறல்

காசி ஆனந்தன்
மலைமீது மாலைசாய்ந் தாற்போல்
மழை மேகம் இறங்கினாற் போல்
மலை நின்ற சோலைக் குள்ளே
மாவீரர் இருக்கை கொண்டார்!
மலை தாவி நடந்து வந்த
மயக்கத்தி லுறக்க மென்றோர்
மலையேறி விழுத லுற்றார்....
மரணம்போல் துயிலுங் கொண்டார்!

தானைதான் உறங்கி நிற்கும்...
தமிழ்வீரம் உறங்கிப் போமா?
மானத்தில் வளர்ந்த வீரர்
மலைத் தோளின் அழகு பார்த்தும்
வானையே ஒத்த மார்பின்
வடிவினைப் பார்த்து மங்கே
நானொரு மனிதன் மட்டும்
நனிதுயில் மறந்து நின்றேன்!

எழில்பூத்த மலர்ச்சோ லைக்குள்
இருளோடி மறையும் வண்ணம்
ஒளிபூத்த தென்ன வானில்
ஓவிய நிலவு தோன்றி
விழிபூத்த நிலையில் நானோ
வெறிபூத்த மனித னானேன்...
களிபூத்த நெஞ்சி னோடு
கால் போன போக்கில் போனேன்...

பொன்மழை பொழியும் வண்ணப்
புதுநிலா வானின் மேலே
என்னையும் இழுக்கும்... கால்கள்
இயலாமல் நிலத்தில் நிற்கும்!
மென்மலர் பூத்த பொய்கை
மேலெழுந் தாடும் வண்டின்
இன்னிசை நிலத்தின் மேல் நான்
இருப்பதே சரியென்றோதும்!

ஒப்பிலா அழகில் பூத்த
ஒளிக்காட்டில் கவிஞ னென்னை
இப்படிக் கொணர்ந்த நெஞ்சம்
இளமையில் தோய்ந்த நெஞ்சம்
அற்புதங் காட்டி வைக்க
அழைத்தது போலும்... ஆமாம்
செப்பவும் முடிய வில்லை
செந்தமிழ்க் கவிதை சொல்வேன்...

அழகடா அழகுக் கோலம்!
அவள் கோலம் அமுதின் கோலம்!
தழலிலே வெந்த கட்டித்
தங்கத்தின் புதிய கோலம்!
பழகவோ எதிரே வந்தாள்...
பைந்தமிழ்க் கன்னிப் பாவை?
நிழலிலே ஒதுங்கி நின்று
நெஞ்சத்தை அருகில் விட்டேன்...

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

காசி ஆனந்தன்
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!

குழப்பம்

காசி ஆனந்தன்
கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!

விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?

உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?

மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?

கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?

என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!

பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!

ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!

ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?

செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!

கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.

கால முனிவன் கூற்று

காசி ஆனந்தன்
எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...

வீரம்

காசி ஆனந்தன்
அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!

போர்

காசி ஆனந்தன்
தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா?

தமிழச்சி!

காசி ஆனந்தன்
இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?

விடுதலைப் பொன்னாள்

காசி ஆனந்தன்
காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?

பெருமூச்சு

காசி ஆனந்தன்
வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?

வீரத்தாய்!

காசி ஆனந்தன்
தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!

காலையும் களமும்

காசி ஆனந்தன்
கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!

தமிழ்மேல் ஆணை!

காசி ஆனந்தன்
தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை!

எழுச்சி

காசி ஆனந்தன்
தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

பயணம்

காசி ஆனந்தன்
நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை!

பூத்தது விடுதலை!

காசி ஆனந்தன்
புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!

மடிந்து போ!

காசி ஆனந்தன்
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!

தமிழை கல்விமொழி ஆக்கு

காசி ஆனந்தன்
தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!

எத்தனை பெரிய மனம் உனக்கு?

காசி ஆனந்தன்
எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

தமிழர் விடுதலை!

காசி ஆனந்தன்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!

மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை!
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!

குப்பு றக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

வாருங்கள்!

காசி ஆனந்தன்
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்! முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

தமிழே! உயிரே!

காசி ஆனந்தன்
தமிழே! உயிரே! வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!
தமிழே! உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!
தமிழே! நீயேஎன் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!
அமிழ்தே! நீதரும் இன்பம்....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?
தமிழே! இன்றுனைப் பழிக்கும்
தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்
அமிழ்தே! நீவாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!
தமிழே! உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!
அமிழ்தே உனைஎவன் தொட்டான்?
அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

களம் வருவோம்!

காசி ஆனந்தன்
போர் முரசோடு புறப்படடா! தம்பி!
புல்லர்கள் காதில் அறைந்து வைப்போம்!
பேரரசொன்று படைத்திடு வோமென்று பேட்டைக்குப்
பேட்டை முழங்கி வைப்போம்!

ஆளுக் கொருவன் தலைபறிப்போம்! தம்பி!
அணுவணுவாய் அவன் உடல் முறிப்போம்!
நாளுக்கு நாள் தமிழ் நாட்டை அழிப்பவன்
நாடகம் ஓய ஓர் நாள் குறிப்போம்!

மானம் விழுந்து துடிக்குதடா! தம்பி!
மறவன் கதைகள் விளைந்த மண்ணில்
ஈனம் விளைந்து கிடக்குதடா! இதை
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?

துள்ளி எழுந்து புறப்படடா! தம்பி!
தூய தமிழ்ப்படை ஒன்றமைப்போம்!
எள்ளி நகைக்கும் பகைவன் உடல்களை
எண்பது துண்டுகளாக்கி வைப்போம்!

மூவர் தமிழ்ப்படை அஞ்சுவதோ? தம்பி!
மூலையில் நம்மவர் துஞ்சுவதோ?
சாவை எதிர்த்து வலம்வருவோம்! தமிழ்ச்
சாதி பிழைக்கப் புறப்படடா!

தமிழர் படை!

காசி ஆனந்தன்
மறவர் படைதான் தமிழ்ப்படை! - குல
மானம் ஒன்றுதான் அடிப்படை!
வெறிகொள் தமிழர் புலிப்படை! - அவர்
வெல்வார் என்பது வெளிப்படை!

புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்!
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!

தமிழன் பண்பில் உருப்படி! - அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி!
அமையும் தன்மை முதற்படி! - பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு! - நீ
வேங்கை; மாற்றான் வெள்ளாடு!
சிறும் பாம்பை வென்றாடு! - கண்
சிவந்து நின்று போராடு!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக