தமிழ்நாட்டு
மக்களை சிந்திக்கவும் சிறப்படையவும் செய்திருக்கும் சி.பி.ஐ.
துறையினருக்கு எனது முதல் வணக்கங்களையும், பெரியோர்களுக்கும்
தாய்மார்களுக்கும் எனது இரண்டாவது வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னடா சி.பி.ஐ.க்கு முதல் வணக்கம் என்கிறானே இந்த அம்பலவாணன் என்று
நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி பிறகு பேசுகிறேன். அதற்கு முன்னதாக
எனதருமை தி.மு.க. தொண்டர்களின் எண்ணத்தை இங்கே ஓட விடுவது தான்
சாலச்சிறந்தது.
சரித்திரம்
படைத்தவர் என்ற புகழை பெறுவதற்காக ஆசைப்பட்டு, தரித்திரம் பிடித்தவர்
என்று சொந்தக் கட்சியினராலேயே அழைக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை
என்பதை, முலாயம் சிங் யாதவை பார்த்து உணர வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளார் எங்கள் தலைவன் கருணாநிதி என்று உடன்பிறப்புகள் தங்கள்
உயிரினும் மேலான தலைவனை நக்கல் அடித்துக் கொண்டிருப்பது அவருக்கு
தெரியுமோ... தெரியாதோ?
அரசியல்வாதிகளுக்கு
எப்பொழுதுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அந்த ஆசைக்கு
கருணாநிதியும் விதிவிலக்கல்ல. முலாயம் சிங்கும் விதிவிலக்கல்ல.
எத்தனையோ மாநிலங்களில் வாரிசு அரசியல் திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி திணிக்கப்படும் வாரிசுகள் தங்களுடைய திறமையின் மூலமாகவோ அல்லது அதிர்ஷ்டத்தின் காரணமாகவோ உச்சத்துக்கு வரமுடியும்.
கடந்த
4 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் முலாயம்சிங்
யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வளர்ந்து விட்டார். நடந்து முடிந்த தேர்தலில்
சமாஜ்வாடி கட்சி மெஜாரிட்டி இடங்களை பிடித்து ஆட்சி அமைத்திருக்கிறது.
இந்த
ஆட்சியில் நான் தான் முதல்வராக அமர்வேன் என்று முலாயம்சிங் பிடிவாதம்
பிடிக்காமல் மகனுக்கு வழிவிட்டு அரசியல் வாதிகளில் நான் வித்தியாசமானவன்
என்று அடையாளம் காட்டியிருக்கிறார்.
இதிலிருந்து
கருணநிதி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை யாரும் சொல்ல வேண்டியது
இல்லை. அவரே சமீபத்தில் மகனை ”தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி
யிருப்பச் செயல்” என்று முனகி இருக்கிறார். அந்த கடமையை செய்தவர் முலாயமா
சிங்கா... கருணாநிதியா என்பதை அவருக்கே விட்டுவிடுகிறேன்.
அது
சரி... ஒரு வாரிசாக இருந்தால்... குறள் வழிப்படி நடக்கலாம். ஒன்பது
வாரிசுகளை திணித்தால்... எந்த வாரிசை அவைக்கு முந்திருக்கச் செய்வது...
அப்படி செய்தால்... குரல் வளையை நெரிக்க காத்திருக்கிறதே வாரிசுக்
கூட்டம்...
போகட்டும்
விடுங்கள்.... இன்னொரு தலைவரின் வாரிசும் சி.பி.ஐ.யில் சிக்கிக் கொண்டு
தவித்து வருகிறார். வாரிசு மட்டுமா... அந்த அரசியல் தலைவரே சிக்கிக்
கொண்டிருக்கிறார். அவர்கள் யார் என்றா கேட்கிறீர்கள்? வேறு யார்? பா.ம.க.
வின் நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும். 2006-ம் ஆண்டு தேர்தல்
சமையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல வந்த கும்பல்
முருகானந்தம் என்பவரை கொன்று விட்டது. இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்
பட்டவர்கள் ராமதாஸும், அன்புமணியும் மட்டுமல்லாமல் ராமதாஸின் தம்பி மற்றும்
மருமகனும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த
வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ராமதாஸின் தம்பிவரை கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது ராமதாஸையும், அன்புமணியையும்
சி.பி.ஐ. விசாரித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ராமதாஸை சி.பி.ஐ.
அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. நேர்மையாக விசாரித்து குற்றவாளிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அரசியலில் வன்முறையாளர்களும், வன்முறை கட்சியைச்
சேர்ந்தவர்களும் பயப்படுவார்கள். அதே சி.பி.ஐ தான் நேற்று ஆயுதப்படை ஐ.ஜி.
பிரமோத் குமாரின் வீடுகளிலும் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதாவது,
திருப்பூரில் இயங்கி வந்த பாசி போரக்ஸ் நிதி நிறுவனம் மக்களை மோசடி
செய்தது. அந்த நிறுவனத்தை பிடித்து மக்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டிய
ஐ.ஜி.யும் நிறுவனத்தோடு சேர்ந்து மோசடி செய்ததோடு, நிறுவனத்தின் பெண்
இயக்குனரை கடத்தி, மானப்பங்கம் செய்யும் வேலைக்கும் உடந்தையாக
இருந்தாராம்... நினைக்கவே பயமாக இருக்கிறது. போலீஸ்காரன் தான் மக்களுக்கு
பாதுகாப்பாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவரை எல்லாம், எப்படி ஐ.பி.எஸ்.
பதவிக்கு தேர்வு செய்தார்கள் என்பது புரியவில்லை.
முடிவாக,
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குனர் ராஜனை சி.பி.ஐ
கையும் களவுமாக பிடித்திருக்கிறது. 2 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கி அதை
எண்ணிப் பார்த்த பிறகே, சி.பி.ஐ. வசம் சிக்கியிருக்கிறார் ராஜன். அதை அவரே
ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அதுவும் நாப்தலின் சோதனையில் அவரது கைரேகையும்
பணத்தில் இருந்த கைரேகையும் ஒத்துப் போயிருக்கிறது. ஆனால், சில ஐ.ஏ.எஸ்.
மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்த ராஜன் நல்லவர்... சி.பி.ஐ. தான் தவறாக
கைது செய்துவிட்டது என்று பேசி வருகிறார்களாம். அப்படி பேசும் அதிகாரிகளின்
யோக்கியதை நாட்டுக்கு தெரியப்படுத்த சி.பி.ஐ. முன் வர வேண்டும் என்று
கேட்டுக்கோண்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.நன்றி தமிழ்லிடர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக