பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், மார்ச் 29, 2012

காசி ஆனந்தன் கவிதைகள் !!

கியூபா முழக்கம்

காசி ஆனந்தன்
ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!
பண்டைத் தமிழன் காலின் சுவடுகள்
பைந்தமிழ் மண்ணில் அழிந்திடவில்லை!
அன்றைத் தமிழன் ஆடியகுளத்தில்
அலைகள் இன்னும் கலைந்திடவில்லை!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!
கோல வானைக் குருவி விழுங்குமோ?
கொடுவாய் முதலை விழுங்குமோ ஆற்றை?
ஈழ மண்ணை லங்கா விழுங்குமோ?
எங்கே பார்க்கலாம்...! என்னடா சேட்டை!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து
பாவி! நீ எம் மண்மிசை இந்நாள்
பாய்ச்சும் துப்பாக்கியின் கொடும் ரவைகள்
நீ அவை ரவைகள் என நினைத்தாலும்
நிச்சயம் அவைகள் சுதந்திர விதைகள்!
ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!
தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!
தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!
தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!
தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!

நெருப்புப் பழம்

காசி ஆனந்தன்
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
அன்னைத் தமிழ் ஈழம்
என்றன் உயிர்த்தாயகம்
தன்னை வென் தொட்டான்?
தமிழா எழுக! என
மின்னை இடியைப்
புயலைத் தமிழ்செய்தேன்...
என்னைக் கொடுங்கவிஞன்
என்றார் நிறையிட்டார்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
ஓங்கு நெடுமதில்கள்
உள்ளே இருட்கோலம்
தாங்க முடியா நோய்
தாகம் பசிக்கொடுமை
தீங்கு படைக்கும்
கொடியர் சிறைக்கோட்டம்
ஏங்கி ஒரு தமிழன்
இங்கு மடிகின்றேன்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
என்னே இவ்வையம்!
எனைப்போல் ஒரு மனிதன்
மண்ணாள இங்கே
வளைந்துயான் அம்மனிதன்
சொன்னடி கைகள்
கட்டித் தொழும்பியிற்றும்
பொண்ணைப் பயலானேன்...
போதும்! இதுபோதும்!
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
வானில் கிளி பறக்கும்...
வண்ணக் கொடிமுல்லை
தான் நினைந்த பக்கம்
தழுவிப் படர்ந்திருக்கும்
மாநிலத்தே யான்
அட! இம் மதில் நடுவில்
ஏனிப்படி இருந்தேன்?
என்ன பிழை செய்தேன்?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
பட்டு நிலா வான்
மிசை எழப் பாரெங்கும்
கொட்டு முழவிசையில்
கூத்தாட வையத்தின்
எட்டுத் திசையும்
மகிழத் தமிழன்யான்
மட்டும் துயர் தாங்கி
மாளப் பிறந்தேனா?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
"நானோ அடிமை?"
என நா விளிக்கிறது!
கூனோ டிருக்கும்
உடலம் கொதிக்கிறது!
தேனோ மரணம்
என நெஞ் சொலிக்கிறது!
ஏனோ விழியில்
இரத்தம் பனிக்கிறது
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

முழக்கம்

காசி ஆனந்தன்
தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!
செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!
வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!
நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!

தமிழ் கன்னி காதல்

காசி ஆனந்தன்
வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
திட்டமிட்டுப் பேசத் தெரிந்தவள்போல் பேசுகிறேன்!
கொட்டி முழக்கும் கடல்போலக்கூவுகிறேன்!
வண்ணக் கவிஞன் வலக்கரத்தில் நான்கிடந்து
கண்மயக்கம் கொண்டு கதைபேசுங் காலமிது!
நெஞ்சிற் கவலையில்லை! நீலக் கருவிழிகள்
கொஞ்சும் ஒளிமுகமும் கூராயொரு மூக்கும்
ஏலேலோ போடும் இதழ்ப்படகும் கொஞ்சம்போல்
மேலே விழுந்திருக்கும் மீசைக் கருப்பழகும்
பட்டினியால் சோர்ந்தாலும் பார்க்கப் பிடிக்கின்ற
கட்டழகு மார்பும் கவிஞனிடங் காண்கின்றேன்!
வானத் தளவு வளர்ந்திருக்கு மென் றலைவன்
மானத்தின் தோளில் மலர்க்கொடிபோ லாடுகிறேன்!
பாவை எனக்கென்ன பஞ்சம்? எனினுமொரு
தேவை யுரைப்பேன் தெரியாதா மன்னவனே...?
விண்ணின் கதிர்வெடித்து வீழ்ந்த சிறுகோளம்
தண்ணென்று மாறித் தரைபிறந்த காலத்தில்
முன்னம் பிறந்த முதல்மனிதன் வீட்டினிலே
கன்னி பிறந்தேன்.. பிறந்துவந்த காலமுதல்
நாலு திசையும் எனக்கிருந்த நல்லபுகழ்
காலம் அறியும்! வரலாறு கண்டறியும்!
செப்பேடறியும்! செதுக்கி வைத்த கல்வெட்டில்
எப்படியு மிந்த எழில்மகளின் பேர்விளங்கும்!
தென்னன் மதுரை சிறப்புடைய வஞ்சிநகர்
பொன்னி நதிபாயும் புகார் நகரம் ஈழநகர்
ஆன தமிழ்நாட்டின் அரசிநான் ஆனாலும்
சிந்து வெளிப்பரப்பும் சிறிக் கடல்பறித்த
தென்குமரி மண்டலமும் தேடிப் புதைபொருளின்
தன்மை அறிந்தவர்கள் இந்தத் தரை முழுதும்
என்னுடைமை என்றே எடுத்துரைப்பர்! முன்பெல்லாம்
மன்னரணி மாடத்தில் மாபுலவர் கூடத்தில்
சொங்கோ லிருந்த சிறப்புடைய மாளிகையில்
தங்கி யிருந்தேன்! தலைவிதியோ மன்னவரே...
பொத்தென்று வீழ்ந்தேன்...! புகழ் கெட்டுப் போனேனே!
கொண்ட முடியிழந்து கோல வடிவிழந்து
பண்டைச் சுகமிழந்த பாவி எதுசெய்வேன்?
நாலுபேர் பார்த்து நகைப்பதற்கு ஊராரின்
கேலி உரைக்கும் கிளிப்பிள்ளை என்செய்வேன்?
என்னால் வயிற்றுணவு தேடு மெழுத்தாளர்
என்னையே விற்றுப் பிழைக்கும் இழிநிலையில்
ஆரிடம்போய்ச் சொல்லி அழுவேன்? தமிழினத்தில்
வேறிடம் நான் போனாலும் வெட்கமிலாப் பாவிகள்
பிச்சையிடும் மாற்றாரின் பின்னால் அடிசுமந்து
கச்சையிலார் போலக் கடுகளவும் மானமின்றி
நாட்டை அடகுவைத்தும் நாலுநாள் சோற்றுக்கு
காட்டிக் கொடுத்தும் கதை நடத்தும் காலத்தில்
எங்க நான் போவேன்...? எளிய தமிழ்ச் சாதி
நூறுவகைச் சாதி நொடிக்கோர் புதுச்சாதி
வேறாய் உருவாக்கி வெவ்வேறாய் மோதுண்டு
தானே அழிந்து தலைசாயும் இந்நாளில்
எங்குநான் போவேன்? எதிர்கால மொன்றில்லாப்
பெண்ணின் நிலையேனோ பெற்றுவிட்டேன்... நான் பொழியும்
கண்ணீர் நதிக்குக் கரையொன்று தேறாதா?
என்றுநான் ஏங்கி யிருக்கையிலே பூமலரும்
குன்றத்தில் வந்தீர்... கொடுத்துவைத்தேன், பொய்யில்லை!
வானமழை பார்க்கும் வயலுழவர் கண்ணெதிரே
போனமழை போலப் புறப்பட்டு வந்துள்ளீர்!
வண்ணக் கரத்தால் வளைக்கின்றீர்... ஏழையின்
எண்ணம் பலிக்காமல் என்செய்யும்? நாளைக்கே
கோல முடிபெறுவேன்.. கொண்ட பழம்பெருமை
மீளப் பெறுவேன்... மிகப் பெரிய மண்பெறுவேன்!
இல்லையா மன்னவரே? என்றாள் தமிழ்க்கன்னி!
முல்லைச் சிரிப்பொன்றை மூடித் திறந்து வைத்தாள்!
நெற்றிப் பிறையின் கீழ் நின்ற புருவத்தைச்
சற்று வளைத்தாள் சரிந்த தலையோடு
காதல் விழியிரண்டில் கைபொருத்திக் கூப்பிட்டாள்!
சேதி தெரிந்து சிறகடித்து நான் போனேன்!
என்கரத்தி லாடும் இவளருகில் இன்னும்நான்
உன்னிப் பறப்பதெனில் உள்ளுணர்வே காரணமாம்!
போதை யுலகம்... புலவனுக்குப் பொன்னுலகம்
வாதை யுலகம் வலம்வந்த வேகத்தில்
கூடல் மகளின் கொதிக்குமுடல் சூட்டினிலும்
வாடும் அவளின் வரலாற்றுச் சூட்டினிலும்
நானொருவன் சூடாகி நல்ல வெறிபடைத்து
தேனமுத மங்கை தமிழ்க்கன்னி என்னுடையாள்
பட்ட துயரம் பறக்க இடிமுழக்கம்
கொட்டி நெடுவான் குலைந்து முகிற்கூட்டம்
ஓசைப் படவும் உலகம் நடுங்குறவும்
ஆசைத் தமிழ்மேல் ஆணை யுரைக்கின்றேன்... 

ஏடு படைப்போம்!

காசி ஆனந்தன்
பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை
பாய்ந்து கலக்கிய சேர மகன்

ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை!
ஏடா தமிழா! எடடா படை!

கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை?
கூப்பிடு கூப்பிடு வீரர்களை!

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?

கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!

காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!

கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?

நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி
நடுங்கப் புயல்போல் நடைகொளடா!

மானம் அழைத்தது! வீரம் அழைத்தது!
மலைத்தோள் இரண்டும் எழவில்லையோ?

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்?

ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம்! எழுதமிழா! 

அழுகின்றோம் அழுகின்றோமே!

காசி ஆனந்தன்
இலையொன்று வீழ்தல் கூடும்
இறகொன் றுதிர்தல் கூடும்
மலையொன்று சாய்வ துண்டோ?
மானத்தர் தமிழீ ழத்தில்
தலையொன்று வீழ்ந்த தையா!
தந்தை செல்வாவைக் கால
அலையொன்று சாய்த்த தையா!
அழுகின்றோம்... அழகின் றோமே!

மொழி இனம் நாடு மூன்றும்
மூச்சாக வாழ்ந்தார் ஐயா!
இழிவாகும் மாற்றினத்தார்
எமை ஆள்தல் என்றார்! எங்கள்
விழிதனைத் திறந்து வைத்தார்!
தனிவிழி மூடி இன்றேன்
அழிவெனும் சாவில் வீழ்ந்தார்?
அம்மவோ! எதுயாம் செய்வோம்?

வஞ்சினம் உரைத்தெழுந்து
வண்டமிழ் ஈழம் வாழ
நஞ்சினர் முன்அறப்போர்
நடத்திய எங்கள் தந்தை
துஞ்சினர்... உலக வாழ்வு
துறந்தனர் எனவந் தெங்கள்
நெஞ்சினில் பாய்ந்த சேதி
நெருப்பினைவார்த்த சேதி!

முடிஇலா அரசர் ஐயா
முழுச்செல்வர் எனினும் வாழ்வில்
கொடியவெஞ் சிறையிருந்தார்!
கொலைவெறிச் சிங்க ளத்தர்
பிடிநின்று தமிழ்மண் காக்கும்
பெரும்போரில் தனைஅழித்தார்!
விடிவொன்று காணுமுன்னம்
வீழ்ந்தாரே... விம்முகின்றோம்!

எந்தையின் கொள்கை என்றும்
ஈழத்தார் வாழ்வாய் நிற்கும்!
செந்தமிழ் ஈழ மண்ணில்
செல்வா கால்தட மிருக்கும்!
சிந்தையில் அவர்பொன் மேனி!
சிலைபோல நிலைத்திருக்கும்!
அந்த நாள் அவர்வாய்ச் சொற்கள்
அழியாதெம் காற்றில் வாழும்! 

கூனுமா தமிழன் வீரம்?

காசி ஆனந்தன்
தூற்றினார் தமிழை என்னும்
துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
எழும்! பகை ஓட்டி வைக்கும்! 

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

காசி ஆனந்தன்
இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்! 

நீயா தமிழனின் பிள்ளை?

காசி ஆனந்தன்
சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்! 

கால முனிவன் குடில்

காசி ஆனந்தன்
யானும் தானையும் மாமலை காடுகள்
யாவும் கடந்து நடை நடந்து
வானில் முகில்கள் அலைந்தன போலிந்த
வையத் திசைகள் அலைந்து வந்து
பேனும் அழுக்கும் பிடித்த தலையொடு
பிணத்தின் நிலையில் முகங்கறுத்து
மான உணர்வில் மறுபடியும் பல
மலைகள் வழியே நடைதொடர்ந்தோம்.

வீர மிருந்தும் வெறியிருந்தும் பகை
வெட்டி வீழ்த்தஓர் படையிருந்தும்
தூர நடந்தும் முழுக்கமிட்டும் மலைத்
தோள்களிரண்டும் துடிதுடித்தும்
போரை நடத்தி முடிக்க எமக்கொரு
பொழுது வரவில்லை... என்ன செய்வோம்?
ஆரை நினைத்தழுவோம்? கொடும் ஊழ்வினை
அதனை நினைத்துப் புலம்பி நின்றோம்!

விழிகள் இரண்டிலும் நீர் வடியும்! என்றன்
வெந்த மனத்தில் நெருப்பு வரும்!
மொழிகள் அழுவது போலவரும்! பெரு
மூச்சுக்கள் ஆயிரம் ஓடிவரும்!
இழிவு சுமந்த தமிழினத்தின் துயர்
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?
அழிவு வருமெனினும் பொறுப்போம்... இந்த
அலைச்சல் நிலைமை எவர் பொறுப்பார்?

தொடையை அடித்திட்டார்! பல்கடித்தார்! சிலர்
சோர்ந்து மரத்திலே சாய்ந்திருந்தார்!
படையில் அவ்வேளை ஒருவன் துடிப்பொடு
பக்கத்திருந்த நெடும்புதரின்
இடையில் விரற்குறி காட்டிநின்றான்! அந்த
இடத்தில் ஒரு குடில் கண்டுவிட்டோம்!
அடையத் துடித்தார் தமிழ்மறவர்... அட
அங்கோர் புதுவெறி வந்ததடா!

துள்ளி நடந்தன கால்கள்! குடிசையின்
தூய கதவம் அடைந்து விட்டோம்!
உள்ளம் சிலிர்க்க நிலை மறந்தோம்! குடில்
உடையானடிகள் வணங்கி நின்றோம்
கள்ளின் வெறிபடைத் தாடினோம்! இங்குள
கடவுளர் யாவர்? என மொழிந்தோம்!
வெள்ளைச் சிரிப்பொடு கால முனிவரன்
விழிகள் திருப்பி மொழிதலுற்றான். 

வேறு

காசி ஆனந்தன்
கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக்
கிழவி மிகக் கொடியாள்!
ஆட்சி தர மறுப்பாள்! உமை
அலைப்பாள்! துயர் கொடுப்பாள்!
நாட்கள் சில போனால் இவள்
நலிவாள்... உடல் மெலிவாள்!
மிட்சி வருமொரு நாள்.. அது
வரைக்கும் இவள் திருநாள்!

வையம் பெறும் இன்பம் ஒரு
வல்லோன் கொடை யாகும்!
தெய்வம் ஒரு நாளும் அட
தீங்கிழைப்ப தில்லை!
எய்தும் துய ரெல்லாம் விதி
இவளின் விளையாட்டே!
ஐயம் இதில் வேண்டாம்... இறை
ஆற்றல்தனை யுணர்வீர்!

ஆண்டிலொரு நூறா? இலை
அதிலே ஒரு பாதி
தாண்டு முனம் தமிழர்க்கொரு
தனிநா டுருவாகும்!

ஈண்டிதனை இறைவன் உமக்
கெடுத்தருளச் சொல்லி
வேண்டின தால் செப்புகிறேன்..
விடுக துய ரென்றான்!

காலமுனி உரைத்தான்! படை
மறவர் களிப் புற்றார்!
நீல நெடு வானம் வரை
பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!

நாலுதிசை யதிரக் கரம்
அடித்தார்! நகை வெடித்தார்!
கோல முகம் படைத்தார்! முனி
குளிர்ந்து மொழி தொடர்வான்...

பூத்த மரம் போல் விளங்கும்
புதிய தமிழ்க் குலமே!
காத்திருந்து கனி பறிப்பீர்...
அதுவரைக்கும் இமைகள்
சாத்தி உறங்காதீர்! படை
வரிசை சரி பார்ப்பீர்!

கூத்து வருமொரு நாள்.. உயிர்
கொடுத்து முடி கொள்வீர்!

போர் நாள் வரு முன்னே... இடை
நாளில் தமிழ் மண்ணில்
கூர் வாளிலும் கொடியோர் சிலர்
குடி கொன்றிடப் பார்ப்பார்!
சோர்வால் மனங் குலையா நிலை
கொண்டே செயல் புரிவீர்!
ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ்
உய்யுந் திருநாளே!

சாதி யெனுந் தீமை... மதச்
சண்டை தலை தூக்கும்!
வீதி குடி ஊர்களென
வேற்றுமைக ளோங்கும்!
நீதி நெறி சொன்ன தமிழ்
நிலம் இழிவு தேடும்!
மோதி விதிக் கிழவி செயல்
வென்று முர சார்ப்பீர்!

பிச்சை யுண வொன்றே பெரி
தென்பான் வயிறுடையான்!
எச்சில் வரு மெனினுந் தமிழ்
இனத்தை விலை வைப்பான்!
நச்சு மகன் குடி கேடன்
நன்றியிலாப் பாவி..
உச்சி பிளந்திடுவீர்! இவன்
ஒழிந்தால் விடிவுண்டே!

தீனி முத லென்பான் வயி
றுடையான்! இவன் தோழன்
ஈன மகன் தன்ன லத்தான்
இனத்தை மதிப்பானா?
தா னுயர்வு பெறுவதெளில்
தாள் பிடித்து நிற்பான்!
மானம் விலை வைப்பான்! இவன்
மனைவியையும் விற்பான்!

இழிவுடையான் தன்னலத்தான்
எதுவரினும் அஞ்சான்!
அழிவு தமி ழினமடைய
அத்தனையுஞ் செய்வான்!
மொழியினிலு மழகு தமிழ்
மொழி மறந்த கொடியன்!
குழி நெருப்பில் இவனுடலகம்
கொடுத்து வெறி கொள்வீர்!

என்றுரைத்தான் காலமுனி
எனது முகம் பார்த்தான்...
நன்று கவிக் குழந்தாய்... ஒரு
நாடமைக்க எழுந்தாய்!
இன்றுவரை தமிழ்ப்புலவன்
ஏடெழுதிக் கெட்டான்!
உன்றனைப் போல களத்திலெவன்
உலவியவ னென்றான்!

ஏடு படைக் கின்ற குலம்
இனிய தமிழ் மொழிக்குக்
கேடு படைப்போ ரதிரக்
கிளர்ச்சி செயும் பொன்னாள்
நாடு படைக் கின்ற திரு
நாளென நான் மொழிவேன்
ஓடு படையோடு புறம்
உணர்ந்த மறத்தமிழா!

நாள் கனியும் நாள் கனிய
மனங்கனியும் நாட்டில்!
வாள் மறையும்! போர்க்கருவி
கொலை மறையும்! அன்பே
தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி
அறஞ் சுமந்து வெல்லும்
ஆள்பவராய்த் தமிழினத்தார்
ஆவது மெய் யறிமின்!

என மொழிந்து காலமுனி
இருகரமுந் தூக்கி
புனல் பொழிந்த தென இதழில்
புது முறுவல் சிந்தி
இனியபடி வாழ்த்தி வெளி
ஏற்றி வழி விட்டான்...
முனிவரனின் அடிதொழுது
முழங்கு படை பெயரும்.... 

நெடும் போர்

காசி ஆனந்தன்
கொட்டு செங் குருதிக் களத்தினி லாங்கே
கொதித்தெழும் மறவர்தம்மிடையே
கட்டுடல் வீரன் ஒரு தமிழ் நெஞ்சன்
கடலென அதிர்ந்தொலி செய்வான்

தமிழர் பொன்னாட்டைத் தாயக மண்ணைத்
தரமறுக் கின்றவ னெவனோ...?
இமை நொடிப் போதி லெழுந்திரு தமிழா?
இன்னுயிர் நமக்கொரு பொருளோ?

ஓடுக தானை! ஓடுக பகைவர்
உலவிடும் திசைவழி யெல்லாம்
தேடுக தமிழர் தேசத்தின் மானம்...
தெய்வத்தில் ஆணையிட் டெழடா!

பைந்தமிழ் மொழியை எவன் பழித்தாலும்
பழித்தவன் தலை கொண்டு வாடா?
ஐந்து துண்டாக்கி அடுப்பினில் வைப்போம்!
அது நமக் குணவாகும் போடா!

கருவினில் அன்னை வளர்த்ததும் இந்தக்
கைகளைத் தந்ததும் எல்லாம்
செருவினில் வெற்றிக் கொடியுடன் நின்று
சிரிப்பதற் கன்றோடா தமிழா!

ஆழிபோல் ஆழி அலைபோல் முழங்கி
ஆடடா.... போர்க்களமாடு!
நாழிகை யொன்றில் நாடாள வேண்டும்
நாமென்று சிங்கம் போலார்த்தான்!

சங்கொன்று களத்தில் முழங்கிற்று! வீரர்
தானையும் முழங்கிற்று கண்டீர்!
பொங்குபோர்க் களத்தில் மாற்றாரும் போந்தார்!
போரென்று கொட்டிற்று முரசம்!

அதிர்ந்தன திசைகள்! அசைந்தன மலைகள்!
அழிந்தன காடுக ளெல்லாம்!
உதிர்ந்தன கரங்கள்! உடைந்தன தலைகள்!
உயர்ந்தன பிணமலைக் குவியல்! 

அறப்போர்

காசி ஆனந்தன்
எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன
ஈனர் குண்டுகளே! - குண்டு
பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப்
பாய்ந்தார் தொண்டர்களே!

மானம் பெரிதென ஊன உடல்விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள்
தங்கம்! தங்கமடா!

பெண்களை மென்மைப் பிறவிகளென்று
பேச மனம் வருமோ? - அங்கே
மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த
மகளிர் குலமல்லவோ?

பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே
பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர்
வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம்
விரும்பித் துடிக்கின்றார்!

ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும்
உரிமைப் போராட்டம்! - வாழ்வு
தாவென்று கேட்டு மடியுதடா எங்கள்
தமிழர் படைக்கூட்டம்!

தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும்
தமிழன் மடிகின்றான்! - தங்கள்
பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு
புலவன் மலர்கின்றான்!

எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி!
இனிய அறமங்கை - கண்ணில்
பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே
பூமி அழியாதே?

ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர்
எழுந்து பெருக்கெடுத்து - நின்ற
ஆழியுஞ் செங்கடலானது கண்டார்!
அதிர்ந்தார் புவிமாந்தர்! 

சாவும் ஒரு வாழ்வே!

காசி ஆனந்தன்
ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! உமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

"முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!" என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
"சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காகச்
செத்தே மடிகின்றேன்!" எனச்
செல்வாய் தமிழ் ஏறே! 

வெற்றி விழா

காசி ஆனந்தன்
முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்!
முழங்கின ஊதுகுழல்!
புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்!
பொழிந்தன தமிழ்ப்பாடல்!
நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்!
நிகழ்ந்தன நடனங்கள்!
அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்!
அனைவரும் மகிழ்கின்றார்!

தூயவெண் சங்குகள் கூவின! கூவின!
தோன்றின கவிதைகள்!
ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன!
அதிர்ந்தன வேட்டுக்கள்!
தாயகம் தனியரசானது! தேனிசை
தவழ்ந்தது காற்றெல்லாம்!
சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும்
சிரித்தன சிரித்தனவே!

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன!
குடிசைகள் நீங்கினவே!
நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம்
நகைத்தன! நகைத்தனவே!
ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்
ஆகிய பேதங்கள்
தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை
பறவைகள் துள்ளுதடா!

பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன!
பாவையர் எழில் காட்டும்
கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள்
இனித்தன வாயெல்லாம்!
தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள்
தாங்கின வீதிகளை
மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை
வீதிகள் மறைந்தன காண்!

கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின!
தமிழ்மனம் குளிர்ந்ததடா!
போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா!
பூத்தன நிறைகுடங்கள்!
ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில்
அழகொரு காட்சியன்றோ?
வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது!
வாழிய தமிழ் நாடே! 

விழா

காசி ஆனந்தன்
முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து! 

சீறி எழுந்திடடா!

காசி ஆனந்தன்
முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச்
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா!

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில்
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா!

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா! 

உணர்ச்சி

காசி ஆனந்தன்
என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி
சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி
என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!
பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே
சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்.. அட மாற்றார்
கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!
நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே
கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!
புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?
தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே? 

தமிழன் கனவு

காசி ஆனந்தன்
பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!

தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்

கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...

கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?

ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய

மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்

நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து

மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்! 
 

செத்த நாள்

காசி ஆனந்தன்
ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லாம்....
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்....
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்! 
 

பாடு குயிலே!

காசி ஆனந்தன்
புள்ளிச் சிறகடித்துப் பாடுகுயிலே! - தமிழன்
புதிது பிறந்தானென்று பாடுகுயிலே!
வெள்ளிக் குரலெடுத்துப் பாடுகுயிலே! - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

நேற்றுவரை உலகில் அஞ்சிநடந்தோம்! - பிறர்
நீட்டும் எலும்புகளை உண்டு கிடந்தோம்!
காற்றுத் திரும்பியது கண்டு மகிழ்ந்தோம் - ஒரு
கவிதை பிறந்ததென்று பாடுகுயிலே!

சாதிப் பிரிவினைக்குச் சாட்டை கொடுத்தோம் - தமிழ்ச்
சாதிக்கு மட்டுமிந்த நாட்டைக் கொடுத்தோம்!
வீதிக்கு வீதி மொழி வேட்கை படைத்தோம்! - விடி
வெள்ளி முளைத்ததென்று பாடுகுயிலே!

ஆளப் பிறந்தவர்கள் நாடு சமைத்தோம்! - எமை
ஆட்டிப் படைத்தவர்க்குப் பாடை சமைத்தோம்!
ஈழத் தமிழ்மனைக்குப் பாலம் அமைத்தோம்! - கவி
எண்ணம் பலித்ததென்று பாடுகுயிலே!

எட்டுத் திசைகளிலும் வெற்றி மகிழ்ந்தோம் - விண்ணின்
எல்லைதனிலே கொடிகட்டி மகிழ்ந்தோம்!
கொட்டும் முரசொடுகை தட்டிமகிழ்தோம் - இது
கொள்ளை மகிழ்ச்சி என்று பாடுகுயிலே! 
 

நில்லடா தம்பி!

காசி ஆனந்தன்
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்!
நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன!
காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்!
தேய்ந்த வீரம் திரும்பி வந்தது!
நில்லடா தம்பி! நெருப்பில் நீநட!
கொல்லும் சாவினைக் கூப்பிட் டழைப்பாய்!
போனாலும் உயிர் போய்த் தொலையட்டும்...
மானம் காத்து மண்டையைப் போடு!
தமிழன் நாட்டைத் தமிழன் ஆளும்
அமிழ்தப் பொன்னாள் இந்நாள் மலர்க!
வெள்ளமே! விரைந்துவா! விடுதலை
கொள்ளும் நாளைக் கொண்டு வருகவே! 
 

அந்நாள் எங்கே?

காசி ஆனந்தன்
முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசி னோடு

கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு

படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்

நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?

தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!

தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!

மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!

பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!

வஞ்சத்தால் தமிழ்மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைக்க
வருவோர் தம்மை

நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த

நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை

அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?

வாள்தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்

கால்தொட்டு வாழ்கின்ற
கண்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்...

பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!

தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்டம்
தொடங்கு வோமே! 
 

உயிரைத் தூக்கி எறி!

காசி ஆனந்தன்
பொன்னால் ஆன தமிழைப்
பொருதும் உடலை முறி!
உன்னால் இயலா தெனில் உன்
உயிரைத் தூக்கி எறி!

மோதித் தமிழ்வாழ் வழிக்கும்
முரடன் உடலைச் சுடு!
நாதி இல்லை எனிலோ
நஞ்சைக் குடித்துப் படு!

பவளத் தமிழர் மண்ணை
பறிப்போன் உடலை மிதி!
அவனைக் கண்டஞ் சுவையேல்
ஆற்றிலேனும் குதி!

மறத்தின் தமிழர் மண்ணில்
மாற்றான் உடலைத் தொலை!
புறத்தில் ஒதுங்கு வாயேல்
போ! நீ செய் தற்கொலை! 
 

தமிழ் உணர்வு

காசி ஆனந்தன்
தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!

என்றன் தமிழுடல் எழவே எழுவான்
எழுதமிழ் வானின் பரிதி!
என்றன் தமிழ்மூச் சென்பது தமிழாம்
எறிவான் இடிபுயல்! அறிதி!
என்றன் தமிழ்நரம் பினிலே பாயும்
எரிதழல் ஆற்றுக் குருதி!
என்றன் தமிழை எவன் பழித்தாலும்
எமன் அவனைத் தொடல் உறுதி!

நான் தமிழனடா! நானொரு தமிழன்!
நாற்றிசையும் இது மொழிவன்!
நான் ஒரு வெறியன் என நகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன்!
நான் உயர்தமிழின் வளமுணர் தமிழன்!
நந்தமிழ் எழயான் எழுவன்!
நான் இழிகழுதை அல்லன்.... வலியன்!
நானிலத்தீர்! இது தெளிமின்! 
 

போர்!

காசி ஆனந்தன்
எழுந்தது தமிழன் தோள்!
இடிந்தது சிறையின் தாள்!
சுழன்றது மறவன் வாள்!
பிறந்தது தமிழர் நாள்!

திரிந்தது பொறிகொள் தேர்!
எரிந்தது பகைவன் ஊர்!
பொழிந்தது குருதி நீர்!
நிகழ்ந்தது தமிழன் போர்!

அதிர்ந்தது முழவின் தோல்!
அழிந்தது திசை ஓர் பால்
பறந்தது வெறியர் கோல்!
பிறந்தது புறப்பா நூல்!

குவிந்தது பகைவர் ஊன்!
மகிழ்ந்தது கழுகு தீன்!
நிமிர்ந்தது தமிழர் கூன்
பறந்தது புலிவில் மீன்! 
 

பேயன்

காசி ஆனந்தன்
அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்.....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்
கயவன் விசயனென்பான்
வருபோதில் இலங்கைமண்
வாசல் திறந்துவைத்த
உருகுவிழல் மனத்தமிழன்
ஒளிஈழம் பறிகொடுத்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்
அங்கெல்லாம் இங்கெல்லாம்
கருகி உழைத்து வளம்
கனிவித்த உயர் தமிழன்
எருவாகிப் பிறன்வாழ்வை
எழிலாக்கித் தான் மாய்ந்தான்...

பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்...
எருமை இவனை ஒருவன்
"ஏ! கள்ளத் தோணி" என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன். 
 

தாவுவோம்!

காசி ஆனந்தன்
பண்டை நாள் பகைமை கொண்ட நாடுகளை
வென்ற மானிடர்கள் வீழவோ....?
மண்டை ஓடுகளை நண்டின் ஓடுநிகர்
துண்டு செய்தவர்கள் தூங்கவோ?
சண்டையின் பெருமை கொண்ட தமிழர்கள்
கண்ட கண்டபடி சாகவோ?
குண்டை ஏந்தியெமை அண்டும் மாற்றானை
முண்டமாக்கி வர ஓடுவோம்!
குங்குமம் குருதி பொங்கிடத் தமிழன்
வெங்களச் செருவில் ஆடவும்
சிங்களப் பகைவர் கண்களைத் தமிழர்
தங்கொடித் திரைகள் மூடவும்
கங்கையின் வடவர் சங்கடப் படவும்
இங்கு வெம்பரணி பாடவும்
சங்கு கத்தியது! பொங்கு மாமறவர்
செங்களத்து மிசை தாவுவோம்!
தட்டுவோம் தோள்கள்! கொட்டுவோம் முரசு!
வெட்டுவோம் தளைகள் வெட்டுவோம்!
எட்டெனும் திசைகள் முற்றிலும் கொடியர்
வெற்றுடல் கால்கொண் டெற்றுவோம்!
கிட்டுவாள் இனிய வெற்றி மாமகளின்
ஒட்டிலே புகழை முட்டுவோம்!
பட்டிலே கொடிகள் வெட்டவான் வெளியில்
விட்டிசைகள் மிழற்றுவோம்!

அட தமிழா!

காசி ஆனந்தன்
ஏனடா... ஆண்டான்
புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்
உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?
கண் சிவந்தோடிக்
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ
பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை
ஈண்டு மாற்றார்கள்
எச்சிலால் வளர்த்தார்...
கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தாய்!
வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!
விரிபழம் புகழை
விற்றனை பாவி!
எரிமலை ஆகடா!
எழுக நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!
தாக்கடா பகையை!
தலைகள் வீழ்த்தடா!
நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!
ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே! 
 

தோழா!

காசி ஆனந்தன்
என்னைப் போலொரு மானிடன் என்னை
எப்படித் தாழ்த்தலாம் தோழா? - அவன்
அன்னை போலவே என்னையும் அன்னை
ஆக்கினள் நானென்ன கீழா?

ஆணை செலுத்தவும் ஆளவும் இங்கே
ஆவி அவனெடுத்தானா? - பிச்சைப்
பானை ஏந்திய கையனாய் இந்தப்
பாவி பிறந்து வந்தேனா?

காற்று வானிலே சிட்டுக்கள் கண்டேன்....
களிப்பினில் என்னை மறந்தேன் - இன்பம்
ஏற்று மறுபொழு தென்கரம் பார்த்தேன்....
இருகை விலங்கோ டிருந்தேன்!

அஞ்சி நடுங்கியும் நெஞ்சம் பதைத்தும்
ஆயுள் கழிந்தது தோழா! - உயிர்
கொஞ்சம் இருந்தது.... கூறடா இந்தக்
கொடுமைக்கும் பேரென்ன ஊழா?

என்ன தமிழனோ? ஏன் பிறந்தேனோ?
என்னடா அடிமையின் வாழ்வு! - சீச்சீ
இன்னோர் மனிதனுக் கூழியஞ் செய்தேன்!
இருப்பதிலும் நன்று சாவு!

தழலிடு!

காசி ஆனந்தன்
காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக்
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன்
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில்
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம்
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை!

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள்
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! - தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

நிலாவே!

காசி ஆனந்தன்
நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக