பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

கனடிய எதிர்க்கட்சியின் (புதிய ஜனநாயகக் கட்சி) மாகாணத் தலைவராகத் தமிழர்!


கனடிய நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியாகத் திகழ்வது 'புதிய ஜனநாயகக் கட்சி'. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டே தமிழ்ப்பெண் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் வெற்றிபெற்று முதலாவது தமிழ்-கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு இன்று பதவியில் இருக்கிறார். இந்தப் 'புதிய ஜனநாயகக் கட்சி'யின் ஒன்டாரியோ மாகாணத்துக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இன்று ஏப்ரல் பதினான்காம் நாள், ஹமில்ட்டனில் நடைபெற்றது.

இவ்வாக்கெடுப்பில் எமது தமிழ் இளைஞரான திரு. நீதன் சண்முகராஜா அவர்கள் வெற்றிபெற்று புதிய ஜனநாயகக் கட்சியின் 'ஒன்டாரியோ' மாகாணத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற இனிப்பான செய்தியை மகிழ்வோடும் பெருமையோடும் பகிர்ந்துகொள்கிறேன். ஒன்டாரியோ மாகாணமே கனடாவில் அதிக மக்கள் தொகைகொண்ட மாகாணம் என்பதும், இம்மாகாணத்தில்தான் டொரோண்டோ மாநகரம், மற்றும் கனடியத் தலைநகர் ஒட்டாவா ஆகியன உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவயது முதலே தமிழ் இனவிடிவு, தமிழீழ விடுதலை சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தியவர் நீதன். ஊடகத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மக்கள் மேம்பாடு, தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றுக்காக அயராது உழைத்தவர். உரிமை மறுக்கப்பட்ட மக்கள் குமுகத்தின் ஆதரவுக் குரலாகக் கனடிய அரசியல் அரங்கில் தொடர்ந்து ஒலித்துவந்தவர். கனடிய நாடாளுமன்றத்தில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக ஒலிப்பார் என்று நான் பெரிதும் எதிர்பார்த்தது நீதனைத்தான். அது ராதிகாவால் முதலில் கைகூடியது. ஆனால் இன்று ஒன்டாரியோ மாகாணத்தின் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவராக வெற்றிபெற்றுள்ள நீதன், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல; பிரதமராகக் கூடத் தமிழர் வரும் நாள் தொலைவில் இல்லை என்ற புதிய கனவினைத் தமிழர் மனங்களில் விதைத்துள்ளார்.

ஈழத்தை இறுதியாய் ஆண்ட தமிழ் மன்னன் 'எல்லாளன்'. அந்த 'எல்லாளன்' என்ற பெயரையே சென்ற ஆண்டு பிறந்த தனது மகனுக்கு வைத்து அழகுபார்த்த நீதன் அவர்களை கனடாவின் முதல் தமிழ் பிரதமராக வளர்த்தெடுக்கும் பயணத்தில் ஒன்றிணைவோம். வாழ்த்துவோம், வலுச்சேர்ப்போம். நீதன்... இப்பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் நீண்ட நாள் உழைப்பின் அறுவடை இது! 'உங்களால் முடியாது' என்று 'அவர்கள்' உங்களுக்குச் சொல்ல அனுமதியாதீர்' என்பார் புதிய ஜனநாயகக் கட்சியின் மறைந்த தலைவர் ஜாக் லேடன். அந்த வார்த்தைகளை நீங்கள் நெஞ்சில் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடு இந்த வெற்றி. 'நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது' என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன். அவரது உறுதியை நீங்கள் உங்கள் நெஞ்சில் வரித்துக் கொண்டதன் சாட்சி இந்த வெற்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள் நீதன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக