பக்கங்கள்

திருக்குறள்

சனி, ஏப்ரல் 28, 2012

டெசோ கூட்டத்தில் கலைஞர் பேசியது என்ன ??


பிப்ரவரி 2009


‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?
ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குthத் தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் அறிக்கைகளை விடுகிறார்.


இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்த வில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் மேல் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்!


இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர்களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டியலிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.


1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாணி முன்னுரையோடு வெளியிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:


தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?


மொராக்கோ நாட்டில் நடைபெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது. அதேபோல பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. பாலஸ்தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இஸ்ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப்பட்டது.


உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேசமாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.


நான் கேட்பதெல்லாம், மொராக்கோவில் போராடுகின்ற கொரில்லாக்களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர்களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்? தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ்நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன் வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.


இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தியிலே உள்ள உள்துறை அமைச்சகத் திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடைபெறுகின்ற அரசு) பிரிவினைவாதத்திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள்!


ஆகஸ்டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிரஸ் தலைமையும்தான். இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.


அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இவர்களுடைய தேசியம், வேறு யார் எதிர்த்தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது. இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலைநாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.


- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறையில் அடைப்பது ஏன்?

மார்ச் 2009


‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (2)
ஆயுதம் ஏந்தும் காலம் வரும்

நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.

“நான் உறுதியாகச் சொல்கிறேன். அரசியல் லாபத்திற்காகத் தான் இலங்கைப் பிரச்சினையை எடுக்கிறோம் என்று யாராவது சொன்னால், நாங்கள் நடந்து முடிந்த பொது தேர்தலிலேயே இலங்கைப் பிரச்சினையை முன் வைத்திருப்போம்.


நாங்கள் இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக வலியுறுத்த விரும்பவில்லை. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலிலே ஓடுகின்ற இரத்தம், தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கின்ற துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ்!! தமிழ்! என்று துடிப்பது உண்மையானால் அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? அவனுடைய உரிமைக் குரலுக்கு ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை! பழங்கதை பேசிப் பயனில்லை; வீரம் பேசிப் பயனில்லை. கனக விஜயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாகக் கொண்டு வந்தான் கரிகாலன்; ராஜேந்திர சோழன் கடாரம் சென்றான்; வென்றான்! இது சரித்திரம்!


ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். என்ன செயலில்? எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இப்போது வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.


இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம்.
ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காததைப் போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை.


எனவேதான் சொல்லுகிறேன், இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக - அதற்குத் தயாராகிவிட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித் தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழ நாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.


தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓரணியில் நிற்க வேண்டும்.


பிரதமர் ராஜீவின் பொல்லாத பேச்சு


பத்திரிகைச் செய்தியின் குறிப்புப்படி அக்டோபர் முதல் நாள் பயங்கரமான எரிகுண்டுகள் தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற திரிகோணமலைப் பகுதியிலே வீசி எறியப்பட்டு, பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.


250 பேர் தப்பித்துப் பிழைத்து அகதிகளாக வந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இரண்டு விடுதலைப் போராளிகள் முகமெல்லாம் கருகிப் போய் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இப்படி நடைபெறுகின்ற அக்கிரமங்களை நாம் கண்டிக்கத்தான் இந்த பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்.


இந்த அக்கிரமத்தை கேட்க வேறு ஆளே இல்லையா? நாம் கேட்க வேண்டிய முறைப்படியெல்லாம் கேட்டாகி விட்டது - 1983 ஆம் ஆண்டில் இந்த அநியாய இனப் படுகொலை இலங்கையில் தொடங்கியவுடன் தமிழகம் கொந்தளித்தது - கிளர்ச்சி வடிவெடுத்தது.


ஜனநாயக ரீதியில் அணுகிப் பார்த்தோம். போராட்ட ரீதியில் அணுகிப் பார்த்தோம். பல முறையீடுகளை எடுத்துச் சென்று அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை சந்தித்துப் பார்த்தோம். எதுவும் நடைபெறவில்லை. இப்போது நடைபெறுகின்ற அக்கிரமங்களை மாநிலங்களவையில் வை.கோபால்சாமி, எல். கணேசன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன போதும், நாடாளுமன்றத்திலே என்.வி.என். சோமுவும், கலாநிதியும் எடுத்துச் சொன்ன போதும் கிடைத்த பதிலென்ன?


வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கியது. அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. அதை இலங்கைக்கு அனுப்புவீர்களேயானால், அது இலங்கைத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும். எனவே அங்கே அனுப்பாதீர்கள் என்று தமிழ்நாடு ஒருமித்த குரல் கொடுத்து கேட்டுக் கொண்டது. அப்படியிருந்தும் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழர்களைக் கொல்லுகின்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்த அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது நியாயம் தானா? என்று கோபால்சாமி கேட்டபோது பிரதமர் எழுந்து, “அந்த ஆயுதங்களில் - ‘இது தமிழர்களைக் கொல்ல’ என்று எழுதப்படவில்லை” என்று சொன்னார்.


உலகத்தில் எந்த யுத்தத்திலாவது - எந்த துப்பாக்கிக் குண்டிலாவது - அல்லது எந்த துப்பாக்கியிலாவது இது இன்னின்னாரைக் கொல்ல என்று எழுதப்பட்டிருக்குமா? நான் வேதனையோடு ராஜீவ்காந்தி அவர்களைpப் பார்த்து கேட்கிறேன். அன்னை இந்திராகாந்தியின் உடலைப் பல குண்டுகள் துளைத்தனவே - அதிலே எந்தக் ‘குண்டிலாவது இது இந்திரா காந்தியைக் கொல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததா? ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல், உணர்வு இல்லாமல், விமானத்தை அனுப்பி - அதிலே வந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. இது நியாயம்தானா என்று கேட்டோம்.


இப்படிக் கேட்ட கோபால்சாமிக்கு கிடைத்த பதில் அந்த ஆயுதத்தில் தமிர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை என்கின்ற ஹாசியமான - நகைச்சுவை வாய்ந்த ஒரு பதிலைத்தான் பிரதமர் ராஜீவ்காந்தி தருகிறார். எனவேதான் இலங்கையில் இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற நாம்தான் முன்வரவேண்டும். நாம் தான் குரலெழுப்ப வேண்டும் என்கின்ற இறுதி முடிவுக்கு இன்றைக்கு நாம் வந்திருக்கின்றோம்.

‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன? (3)



நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.


என்னிடத்திலே ஒரு துண்டு அறிக்கை தரப்பட்டது. தூத்துக்குடி தெர்மல் நகர் விடுதலைப் புலிகள் தோழமைக் கழகத்தின் சார்பிலே வெளியிடப்பட்ட அறிக்கை. அதில் சில விவரங்கள்:


இலங்கையில் தமிழன் எத்தனை ஆண்டுக்காலம் பூர்வீகமாக வாழ்ந்தான் - ஆண்டான் என்பதும், அதற்குப் பிறகு கி.மு.543-ல் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலே சிங்களவன் வந்து - குடியேறி னான் என்பதும், கொஞ்சம் கொஞ்சமாக தமிழனுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதும், ஆண்டுக் கணக்கு விவரத்தோடு அதிலே வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடப்பட்ட அதில், அங்கே சிங்கள ஆட்சி, உதயமான பிறகு - தமிழனுடைய ஆட்சி தோற் கடிக்கப்பட்ட பிறகு - இலங்கையில் தமிழர்களுக்கு இன்னல்கள் விளைவிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்திலே உள்ள மன்னர்கள் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினார்கள் என்ற விவரங்கள் அதில் வெளியிடப்பட்டிருக்கின்றன.


கி.பி. 100 முதல் 200 வரையுள்ள காலகட்டத்திலே இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது கரிகாலன் என்கின்ற தமிழ் மன்னன் படையெடுத்துச் சென்று தமிழர்களைக் காப்பாற்றினான். கி.பி.590-600 இந்தக் காலகட்டத்தில் சிம்ம விஷ்ணு என்ற தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் இலங்கைக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கின்றான். கி.பி.645-ல் நரசிம்மவர்மன் என்ற மன்னன் தமிழகத்திலே இருந்து படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.


கி.பி. 835-ல் பாண்டியன் சிரீமாற சீவல்லபன் என்ற மன்னன் படையை அனுப்பி அங்கே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கின்றான்.


கி.பி. 907-947 இந்தக் காலகட்டத்தில் பாரந்தகச் சோழன் தன்னுடைய படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றியிருக்கின்றான்.


கி.பி.960-ல் சுந்தரச் சோழன் படையை அனுப்பி இலங்கையிலே சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்தைக் காப்பாற்றி மீட்டுக் கொடுத்திருக்கின்றான்.


கி.பி.993-ல் இராசராச சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழனைக் காப்பாற்றியிருக்கிறான். மீண்டும் கி.பி.1017-ல் இராசேந்திர சோழன் படையை அனுப்பி இலங்கையிலே பாதிக்கப்பட்ட தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறான்.


கி.பி. 1055-ல் இரண்டாம் இராசேந்திர சோழன் படையை அனுப்பி விஜயபாகுவின் கொட்டத்தை அடக்கி இலங்கையிலே உள்ள தமிழர்களைப் பாதுகாத்திருக்கிறான்.


இப்படி வரிசையாகப் பார்த்தால், இலங்கைத் தமிழனுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழ்நாட்டுப் படைதான் இலங்கைக்குச் சென்று தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இப்போது நாம் பைத்தியக்காரத்தனமாக வடநாட்டுப் படையை எதிர்பார்த்தால் வருமா? எனவேதான் வரலாற்றினுடைய குறிப்பின்படி - சரித்திரத்தினுடைய தொடர்பின்படி பார்த்தால்கூட, இலங்கையிலே இன்றைக்குப் பாதிக்கப்படுகின்ற தமிழனைக் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பு இங்கே உள்ள ஐந்துகோடித் தமிழர்களுக்குத் தான் இருக்கும். ஐந்து கோடித் தமிழர்களில் சில பேருக்கு இல்லை. நான் ஒத்துக் கொள்கிறேன்.


தமிழீழத்தை ஒத்துக் கொள்ளாத - இலங்கையிலே தனித்தமிழ்நாட்டை ஒத்துக் கொள்ளாத சில சோற்றாலடித்த பிண்டங்களும் தமிழ்நாட்டிலே இருக்கிறார்கள்.----நன்றி கீற்று




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக