பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 22, 2011

தமிழாழ்வார்கள்!!

  1. 12. திருமங்கையாழ்வார்

    பிறந்த காலம்
    8ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திருவல்லிநாடு
    பிறந்த மாதம்
    கார்த்திகை
    திருநட்சத்திரம்
    கார்த்திகை
    அம்சம்
    சாரங்கம்
     
                    சோழப் பேரரசில் உள்ள திருவல்லிநாடு என்னும் நகருக்கு அருகில் உள்ள திருக்குறையலூர் என்னும் கிராமத்தில், ஆலிநாடார் என்னும் சேணைத்தலைவர், வல்லித்திரு என்னும் தம்பதியரிடத்து உதித்தத் தெய்வப்பிறவியே திருமங்கையாழ்வார் ஆவார். அவரது இயற்பெயர் நீலன் ஆகும்.
                    சிறுவயதிலேயே வில், வாள், வேல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று அனைத்து வீரக்கலைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தோடு வேதங்களும், முறையான கல்வியும் கற்றுத் தேர்ந்தார்.
                    அவரது வீரத்திற்கும் விவேகத்திற்கும் பரிசாக சோழ மன்னர் திருமங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சிற்றரசை நீலருக்குப் பரிசாக வழங்கினார்.
                    எதிரிகளுக்கு இவர் காலனாக இருந்ததால் இவரை காலன் என்று அழைத்தனர். சோழ அரசில் பர என்னும் அடைமொழியை பெயருக்கு முன் வைக்கும் முறையால் (வேங்கையின் மைந்தன் என்னும் நூலில் நீங்கள் படித்திருக்கலாம்…பர மற்றும் உடையவர் என்னும் பட்டப்பெயர் மன்னர்களின் பெயருக்கு முன் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும் என்று) இவர் பரகாலன் என்னும் பெயருடன் சிற்றரசராக முடிசூட்டப்பட்டார்.
    திருமங்கையாழ்வாரின் அருள் ஆக்கங்கள்:
    பெரிய திருமொழி                 1084
    குறுந்தாண்டகம்                  20
    நெடுந்தாண்டகம்                30
    திருவெழுக்கூற்றிருக்கை       1
    சிறிய திருமடல்                   40
    பெரிய திருமடல்                  78.
    நாற்கவி:
    1. ஆசுகவி - உடனுக்குடன் பாடுவது
    2. சித்திரக்கவி - பாடலும், பாடலின் பொருளும் சித்திர அலங்காரமாய் அமைய பாடுவது
    3. விஸ்த்தாரக்கவி - விஸ்த்தாரமாக, விரிவாகப் பாடுவது
    4. மதுரகவி - இசை நயத்துடன் பாடுவது
    இந்த நான்கு வகை கவிகளிலும், திருமங்கையாழ்வார் திறமையானவராக இருந்ததால், அவரைப் பாராட்டி திருஞான சம்பந்தர் அவர்கள் அவருக்கு ‘நாலு கவி பெருமாள்’ என்று பட்டமளித்து தன் வேலையும் அவருக்குப் பரிசாக அளித்தார்.


    11. திருப்பாணாழ்வார்

  2. பிறந்த காலம்
    8ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திருவல்லிநாடு
    பிறந்த மாதம்
    கார்த்திகை
    திருநட்சத்திரம்
    கார்த்திகை
    அம்சம்
    சாரங்கம்
    வேறு பெயர்கள்
    பாணர் ,முனி -வாஹனர் ,யோகி – வாஹனர் , கவீஸ்வரர்

                    திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் திருவரங்கத்தின் உள்ளே செல்வதற்கு இவருக்கு அனுமதி கிடையாது. அதனால் இவர் காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார். ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர், பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.

    பாடல்கள்
                    இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.

    10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

  3. பிறந்த காலம்
    8ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திருமண்டங்குடி
    பிறந்த மாதம்
    மார்கழி
    திருநட்சத்திரம்
    கேட்டை
    வேறு பெயர்கள்
    விப்ரனாராயனர் , திருமண்டங்குடியார் ,பாக்தங்கிரிறேனு , பல்லயுனர்த்திய பிரான்

                    எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.
                    சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.
                    ஸ்ரீமந் நாராயணணின் பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டு தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.

    9. ஆண்டாள்

  4. பிறந்த காலம்
    9ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    பிறந்த மாதம்
    ஆடி
    திருநட்சத்திரம்
    பூரம்
    வேறு பெயர்கள்
    சூடிகொடுத்த நாசெயார் , கோடை ,கோடை பிராட்டி

                   ஆண்டாள் தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
    ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்
                    ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த கோயிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
                    இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
                    கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
    ஆண்டாள் பாடல்கள்
                    ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.
                    இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
                    இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.
                    ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.
  5. 8. பெரியாழ்வார்


    பிறந்த காலம் 9ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்ஸ்ரீவில்லிபுத்தூர்



    வேறு பெயர்கள்: விஷ்ணு சித்தர் , பட்ட நாடன் , பட்டார் பிரான் , ஸ்ரீ வில்லிபுத்தூரார்.


                  ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி.9ம் நூற்றாண்டில், குரோதன வருடம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் இவர் விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்டார்.
                  கண்ணபிரானின் கதைகளைப் பெற்றோர் மூலம் கேட்டறிந்த விஷ்ணு சித்தர் அவன் பக்தியில் திளைத்தார். வட பத்ரசாயி என்ற ரங்க மன்னாருக்காக நந்தவனம் அமைத்து, துளசி மாலைகளை அன்றாடம் கோயிலுக்குச் சமர்ப்பித்தார். எம்பெருமானின் கட்டளைப்படி, பாண்டிய நாடு சென்று பரமனைச் சரணடைவது ஒன்றே முக்திக்கு வழிகாட்டும் என்ற தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். மன்னர் மகிழ்ந்து “பட்டர் பிரான்” என்ற பெயரை விஷ்ணு சித்தருக்களித்தார்.

                  மன்னன் தமக்களித்த பொன் நகைகளை ரங்கனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். தம் நந்தவனக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு பூமாலையோடு, பாமாலையும் ஸ்ரீமந் நாராயணனுக்களித்து பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார்.
                  திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்ற பிரபந்தங்களை இயற்றினார்.


    பெரியாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய
                       திருப்பல்லாண்டு
                         
                             காப்பு
                       குறள்வெண்செந்துறை
    
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* 
                   பலகோடி நூறாயிரம்
             மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
                   சேவடி செவ்வித்திருக்காப்பு                          (1)
    

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    

    அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
      வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும்  பல்லாண்டு*
      வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
      படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.        (2)
    
    வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்*
      கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்*
      ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை*
      பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே.*           (3)
    
    ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*
      கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ*
      நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று*
      பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே.         (4)
    
    அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை*
      இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு*
      தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி*
      பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)
    
    எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
      வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
      அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை*
      பந்தனை தீரப்  பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே.      (6)
    
    தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்*
      கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
      மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும்  பொழிகுருதி
      பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.             (7)
    
    நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
      கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
      மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல*
      பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.        (8)
    
    உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு*
      தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்*
      விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்*
      படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  (9)
    
    எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
      அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்*
      செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து *ஐந்தலைய
      பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.      (10)
    
    அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன்* அபிமான துங்கன்
      செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
      நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி*
      பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.      (11)
    
    பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
      வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்*
      நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று*
      பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே.       (12)
    
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

    7. குலசேகர ஆழ்வார்

  6. பிறந்த காலம்
    9ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திர்வஞ்சிக்கோலம்
    பிறந்த மாதம்
    மாசி
    திருநட்சத்திரம்
    புனர்பூசம்
    வேறு பெயர்கள்
    கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

    பிறப்பு
                    இவர் பிறந்த ஊர் கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீடர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உளது. அதை குலசேகரர்தான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை. இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் திருமாலின் கௌஸ்துப அம்சம் பொருந்தியவர்.
    அரசமரபும் துறவும்
                    கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் சேவித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.
    குலசேகரப்படி
                    திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேணுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

    செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
           நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்

    அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
           படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

    இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
                    இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.
    பெருமாள்திருமொழி
                    திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம், முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
                    பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. 


  7. 6. மதுரகவி ஆழ்வார்



  8. பிறந்த காலம்
    9ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திருகொல்லூர்
    பிறந்த மாதம்
    சித்திரை
    திருநட்சத்திரம்
    அவிட்டம்
    வேறு பெயர்கள்
    இங்கவியார் , அழ்வாருக்கு அடியான்

                   
                    மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் பிறந்தார். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
    பெயர்க்காரணம்
                    சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது.
    இளமைக்காலம்
                    இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலகவிஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.
    கண்ணி நுண் சிறுத்தாம்பு
                    நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்:
    நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
    மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;     
    தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
    பாவின் இன்னிசை பாடித்திரிவனே.

    5. நம்மாழ்வார்


  9. பிறந்த காலம்
    9 ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    ஆழ்வார் திருநகரி
    பிறந்த மாதம்
    வைகாசி
    திருநட்சத்திரம்
    விசாக
    வேறு பெயர்கள்
    சடகோபன்,சடாரி, பராங்குசன் ,மாறன்,வகுளா பரணன்,குருகையர் கோனே
    அம்சம்
    விஷ்வக்சேன

    வரலாறு
                    நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு திரு மகனாராக வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் ஒரு சடம் போல் இருந்தார். இக்குழந்தை உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.
                    பதினாறு ஆண்டுகள் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார். அயோத்தியில் தங்கி இருந்த மதுரகவி என்பவர் தெற்கு திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய தெற்கு திசை நோக்கி பயணித்தார். மாறனிடமிருந்து அந்த ஒளி வந்தது என்று அறிந்து அவரை சிறு கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். அவரிடமிருது நிறைய அர்த்தங்களைப் பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.
    நூல்கள்
                    நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய 4 நூல்களை இயற்றினார். இவை ரிக், யஜுர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக அமைந்திருப்பதாக பெரியோர்கள் சொல்வார்கள். இந்த திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும், திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும் பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் என நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்.

    4. திருமழிசையாழ்வார்


  10. பிறந்த காலம்
    7ம் நூற்றாண்டு
    பிறந்த இடம்
    திருமழிசை
    பிறந்த மாதம்
    தை
    திருநட்சத்திரம்
    மகம்
    வேறு பெயர்கள்
    பக்தி சாரர் , பார்கவர் , மகிசாராபுரிஸ்வரர் ,மழிசை பிரான்
    அம்சம்
    சுதர்சனம்
    பிறப்பின் அற்புதம்
                                    பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்றுப்பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப்பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப்பிரம்புத்தூற்றின் கீழ் போட்டுச்சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண் டம் எல்ல உருப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் குழந்தையைக் கண்டெடுத்து தம் மனைவி பங்கயச்செல்வியிடம் கொடுத்தனன். அவர்களுக்கு வேறு மகப்பேறு இல்லை. இக்குழந்தையை வளர்க்கத் தீர்மானித்தனர். என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. என்பது அவர் பிறப்பைப் பற்றி கிடைக்கும் குறிப்புகள். அவரே திருச்சந்த விருத்தத்தில் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறார்.
    குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
    நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்
    என்கிறார்.
     பிரபந்தங்கள்
                    நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக விஷ்ணுவை உயர்வாகச்சொல்லியவை. இவருக்குமுன் தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.
    பரமயோகி
                    இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்ன என்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம் முதலிய ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். முக்கண்ணனான சிவபெருமான் இவரைச் சோதித்து இவருடைய பக்தியை மெச்சி இவருக்கு 'பக்திசாரர்' என்ற சிறப்புப்பெயரை அருளிச் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக