பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், நவம்பர் 29, 2011

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!:பகுதி 2

இந்தியனுக்கு அந்நியன் தரப்போகும் அல்வா துண்டுகள்!:பகுதி 2


எதிர்கால வளமான இந்தியாவிற்கு மின்சாரம் அவசியமாகும். எனவே கூடங்குளம் திட்டம் இந்தியாவிற்கு தேவை. ஆனால் இதற்கு தேவைப்படும் தரமான யுரேனியம் எளிதில் கிடைக்கும் கனடாவைத் தவிர்த்து விட்டு,
அமெரிக்கா மூலம் பெறுவதே எப்போதும் சிறப்பானதாகும். தேவைப்படும் யுரேனியமும் ஒரே சமயத்தில் அமெரிக்கா கொடுக்காது. அவ்வப்போது நடைபெறும் திட்ட செயலாக்கத்தின்படி வழங்கப்படும். எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டாலும் அதற்கு இந்தியா மட்டுமே பொறுப்பு. ஆனால் நிர்வாக கட்டுப்பாடு எப்போதும் அமெரிக்காவின் கைகளில் இருக்கும்.
முன்பேர சந்தைக்கு அனுமதி (ஆன் லைன் வர்த்தகம்) கொடுத்தன் விளைவாக நாட்டில் உள்ள அடிப்படையான அத்தனை பொருட்களுக்கும் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலைவாசி உச்சத்தில் போய்விட்டது. குறிப்பாக இந்த முன்பேர சந்தையை கட்டுப்படுத்தும் பார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.) கொடுத்துள்ள தகவலின்படி இந்தியாவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 23 நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.
இந்த நிறுவனங்கள் அதிகளவில் தங்கம், வெள்ளி போன்ற சந்தையிலும் அடுத்தபடியாக விவசாயம் சார்ந்த விளைபொருட்களிலும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைக்கும் இந்த நிறுவனங்களின் செயல்பாடு 99 லட்சத்து 16 ஆயிரத்து 52 கோடி ரூபாய். ஏறக்குறைய 100 லட்சம் கோடியை அட்டகாசமாக கடந்துள்ளது. பாடுபட்டு உழைப்பவன் ஒரு பக்கம். ஆனால் ஏதோவொரு மூலையில் குளிர்சாதன அறைக்குள் உட்கார்ந்து கொண்டு நோகாமல் நோம்பி கொண்டாடுபவர்களை உருவாக்கி விட்டவரும் நம்முடைய பொருளாதாரப் புலியே.
ஆன் லைன் வர்த்தகத்தை அனுமதித்ததே போதே இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.
உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு இங்கே கொட்டாம்பட்டியில் விளையும் பயறுக்கு விலை நிர்ணயம் செய்யும் கொடுமை இந்த ஆன் லைன் யுக பேரத்தில் நடந்து கொண்டிருப்பதால் விளைவித்தவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் விரலை சூப்பிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வருடத்திலும் எந்த துறையில் பற்றாக்குறை வரும் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கு பேரம் மூலம் விலையை நிர்ணயம் செய்யும் போது எல்லாமே தலைகீழாகப் போய்விடுகின்றது.
இந்த யுக பேரங்களுக்கு பின்னால் இருக்கும் அத்தனை பேர்களும் வெளிநாட்டு முதலீட்டார்களே. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நம்முடைய அரசியல்வாதிகள். எவருக்கோ லாபமாக கடல் கடக்கும் இந்த லாபங்கள் நாட்டில் விலைவாசியாக மாறி சாதாரண மனிதன் தலையில் வந்து விழுகின்றது.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரைக்கும் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய முதலீடுத் தொகை 2,550 கோடி டாலர். (1 லட்சத்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) கடந்த 2010 ஆம் ஆண்டை விட 41 சதவிகிதம் அதிகம். ஆனாலும் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியை நிறுத்தமுடியவில்லை. காரணம் நவம்பர் 22 அன்று வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு 52.30.
ஏனிந்த குளறுபடி?
இன்றைய சூழ்நிலையில் இந்தியா வைத்துள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 31,960 கோடி டாலர் (15 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்) நான் வளர்கிறேனே அம்மா என்பதாக நம் நாட்டின் கடன் தொகையும் மாதத்திற்கு மாதம் எகிறிக் கொண்டேயிருகிறது.
அமெரிக்காவில் ஓபாமா பதவியேற்றதும் வீட்டு வசதி கடனில் சிக்கிய வங்கிகள் பட்டபாடுகள் உலகம் முழுக்க எதிரொலித்தது. அமெரிக்க வங்கிகளுக்கான தர வரிசை குறியீட்டை மாற்றியதும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு தும்மலும் சளியும் வந்த கதை நம் அணைவருக்கும் தெரிந்தது தானே. அதைப்போலவே இந்தியாவிலும் நடந்தது. ஆனால் எத்தனை பேர்களுக்கு தெரிந்திருக்கும்?.
இயல்பாகவே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் அணைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வங்கியில் போடப்படும் பணமும், கிடைக்கும் சொற்ப வட்டி என்றாலும் இன்று வரையிலும் இந்தியர்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் மேல் உள்ள மோகம் குறைந்தபாடில்லை.
ஆனால் வங்கிகளின் செயல்பாடுகள் அத்தனையும் வருடத்திற்கு வருடம் வராக்கடனாகவே போய்க் கொண்டிருக்கிறது. உலகளவில் இந்தியாவில் உள்ள வங்கியின் தரமென்பது 'எத்தகு இடர்பாடுகளையும் தாண்டி வரக்கூடியது' என்கிற நிலையில் சர்வதேச சமூகம் கணக்கில் வைத்திருந்தது.
2004 ஆம் ஆண்டு மூடிஸ் நிறுவனம் பி.ஏ.ஏ 3 என்ற தரக்குறியீட்டை வழங்கியது. ஆனால் வருடந்தோறும் வசூலிக்க முடியாத கடன்களின் அளவை வைத்து அண்மையில் இந்த குறியீட்டை ஒரு படி குறைத்து 'இடர்பாடு காண வாய்ப்புள்ளதாக' மாற்றியுள்ளது. சென்ற செப்டம்பர் வரைக்கும் வசூலிக்க முடியாத கடன் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தொகையென்பது 1.07 லட்சம் கோடி.
நம்முடைய தலைவர்கள் சொல்லும் மற்றொரு கருத்தையும் இப்போது எடுத்துக் கொள்வோம். உற்பத்தி அளவுக்கும் நம்முடைய தேவைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் இரண்டு வகையில் இந்தியாவிற்கு நல்லது. ஒன்று இந்திய பண மதிப்பின் நிலை ஸ்திரமாக இருக்கும். அதே சமயம் இந்திய நுகர்வோர் சந்தையில் பணப்புழக்கம் இன்னும் அதிகமாகும். இதற்கு மேலாக தேவைப்படும் பொருட்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கே வந்து சேரும் என்பதே.
ஆனால் ஒரு கிராமத்து விவசாயி தனக்கு அருகே உள்ள சந்தையில் கொண்டு போய் காய்கறிகளை விற்று விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் லாபமோ நட்டமோ என்று நடையைக் கட்டி விட்டு வந்து விடலாம். ஆனால் நிறுவன பாங்கில் செயல்படப் போகும் பன்னாட்டு சட்டதிட்டங்கள் எத்தனை விவசாய சிந்தனைகளை மாற்ற முடியும்?
சில்லறை வணிகமென்பது அது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. கிராமத்து மக்களின் நலவாழ்வு என்று தொடங்கி, நாட்டின் உணவு பாதுகாப்பு வரைக்கும் வந்து நிற்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கலாச்சார பாதுகாப்பு முதல் அந்தந்த ஊர் அமைதி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கக்கூடியது. இயல்பாகவே இந்திய கிராம மக்கள் அமைதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இது போன்ற அடிப்படை கிராமங்களின் மேல் கையை வைத்து விட்டால் வேறென்ன வேண்டும்.
தொடக்கத்தில் 30 சதவிகிதம் வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு காற்றில் பறக்கும். காரணம் இங்குள்ள விலையை விட சீனப் பொருட்கள் குவியத் தொடங்கும். வேறென்ன வேண்டும்? சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பருத்தி விவசாயத்தை ஒழித்துக் கட்டியதைப் போலவே இப்போது சில்லறை வணிகத்தின் மூலம் இந்திய சமூக கட்டமைப்பை செல்லரிக்கப் போகின்றார்கள்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது எனக் காந்தி தாத்தா சொன்ன வாசகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எட்டவில்லை போதும். ஆனால் இவர்களின் நோக்கம் அத்தனையும் கிராமப் பொருளாதரத்தை அழிப்பதிலேயே குறியாக  இருக்கிறது. அதன் இறுதிக்கட்டம் தான் இப்போது முடிவெடுத்துள்ள அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி.
கிராமப்புறங்களும் விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். மாற்றுப் பொருளாதார சிந்தனைகளைப் பற்றி செயல்படுத்த வேண்டாம். குறைந்தபட்சம் அதை யோசிக்கக்கூட நம் தலைவர்களுக்கு மனமில்லை. கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய நடுத்தரவர்ககத்தினைப் போலவே ஏறக்குறைய இந்தியாவும் இப்போதுள்ள சூழ்நிலையில் இருக்கிறது.
பொருளாதார கொள்கைகளை விவசாயம் சார்ந்து மாற்றியமைக்காத வரை, இந்தியாவால் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீள்வது சாத்தியமேயில்லை. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க கொள்கைகளை தீர்மானிப்பவர்கள் கார்ப்ரேட் கணவான்களே. இது பணம் படைத்தவர்களுக்கான உலகம். உண்பது, குடிப்பது முதல் அணியும் உடைகள் வரைக்கும் எவரோ ஒருவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
அதிலும் இந்திய அரசியல் என்பது அடிவருடிகளின் உலகமாக இருப்பதால் வெற்றிகரமாக இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற தகுதியை நான்காவது ஆண்டாக முகேஷ் அம்பானி (2,260 கோடி டாலர்) யும், இரண்டாவது இடத்தில் இரும்பு மனிதர் ( என்ன பட்டமடா சாமி?) லஷ்மி மிட்டல்(1,920 கோடி டாலர்) மூன்றாவது இடத்தில் அசீம் ப்ரேம்ஜி (1,300 கோடி டாலர்) பெற்றுள்ளனர்.
இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும். நம்முடைய நிதியமைச்சர் பிரணாப் இதைப் பற்றி தெளிவாகவே சொல்லியுள்ளார். “எந்த அரசாங்கமும் தொழில் அதிபர்களிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் “ ஆனால் இவர்களைப் போன்ற இந்தியாவில் உள்ள கார்ப்ரேட் கணவான்கள் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன்களைப் பற்றி எந்த அரசியல்வாதிகளும் வாயே திறப்பதில்லை.
உலகில் தற்போதும் பெட்ரோல் முதலான பல பொருட்களுக்கு டாலர் அடிப்படையிலான வியாபாரமே நடந்து வருவதால், இந்தியா தன்னுடைய டாலர் கையிருப்பைக் குறைக்கும்பட்சத்தில், வரும் காலத்தில் இந்தியாவில் எரிபொருள் முதலான வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறும். இது இந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக சிதைக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்த பொருளாதார கொள்கையினை சீரமைக்காமல் இந்தச் சரிவிலிருந்து இந்தியா மீள்வது கடினம். நம்மை விட லஞ்சம் ஊழல் எண்ணிக்கையில் 86 நாட்கள் முன்ணணியில் இருக்கிறார்கள் என சர்வதேச நிறுவனம் ஒன்று கணக்கெடுத்துள்ளது. இந்தியா 87வது இடத்தில் உள்ளதாம். அந்தஅளவுக்கு சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்க.
நடப்பு (2011 - 12) நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரைக்கும் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 3 லட்சம் கோடி. உங்களுக்கு, வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டுமென்றால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்க. அதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வரப்போகிறார்களே?
நமக்கு கூட்டிப் பெருக்குற வேலை கூட கிடைக்காத என்ன? நம்முடைய பொருளாதார மேதைகளின் கூட்டல் கணக்கில் கடைசியாக நமக்கு கிடைக்கப் போவது இந்த பெருக்கிற வேலை தானே?. நாட்டின் ஆட்சித் தலைமைகளை, பணத்துக்காகவும், சாதிக்காகவும், பரம்பரை விசுவாசத்துக்காகவும், மட்டும் ஓட்டுப்போட்டுத் தெரிவு செய்யும் எமது மக்களுக்கு அது போதாதா..? நன்றி தமிழ் மீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக