பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், நவம்பர் 07, 2016

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06



தொடர்ச்சி..
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’  என்ற பெயர் வந்தது யாரால்?
சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதிவருகின்றனர். அதில் ஒன்றுதான் ஆதிதிராவிடர் பெயரை நீதிக்கட்சியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வைத்தார்கள் என்பது.
no496651
இதோ இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் :
‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர் டாக்டர். சி. நடேசனார் ஆவார். இவர்தான் ‘திராடவிடர் சங்கம்’ என்கிற அமைப்பை 1912இல் தொடங்கினார். இதிலிருந்து தான் திராவிடர் இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது.
திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-3
திராவிடர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த டாக்டர் சி.நடேசனார் நீதிக்கட்சி அரசுக்கு அனுப்பிய ஒரு வேண்டுகோளில் ‘பறையர்’ , ‘பஞ்சமர்’ என்ற சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு, அவர்களது வரலாற்றுக்குரிய சிறப்புப் பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 1922-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம்நாள் பெயர் மாற்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
திராவிடர் இயக்கச் சாதனைகள் – ப-5
பஞ்சமர் – பறையர் என்று உழைக்கும் மக்களை அழைக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்ற குரலை முதன்முதலில் டாக்டர் சி.நடேசன் அவர்கள் எதிரொலிக்கச் செய்தார். இவரே வரலாற்றுப்பூர்வமாய் இந்த மக்களுக்குரிய பெயரான ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயரையும் கண்டுபிடித்து இந்தப் பெயரால் இந்த மக்கள் அழைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசுக்கு வைத்தார். திராவிட இன மக்களின் ஒருங்கிணைந்த திராவிடர் சங்கத்தின் மூலவரான நடேசனாரின் குரலை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டு 1921ல் இம்மக்கள் எவ்வளவு பேர் (சென்னை மாகாணத்தில்) வாழ்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு பஞ்சமர்-பறையர் என்ற சொல் இம்மக்களுக்கு இழிவுதரும் சொல். ஆகவே, இம்மக்களை இனி ‘ஆதிதிராவிடர்கள்’ என்று அழைக்க வேண்டும் என்று 1922 மார்ச் 25ம் தேதி ஒரு பெயர் மாற்ற உத்தரவை பிறப்பித்தது.
தமிழர் சமூக விடுதலை இயக்கம், பொதிகைத் தமிழரசன்
இப்படி எல்லாம் தொடர்ந்து எழுதியும், பேசியும் அன்று முதல் இன்று வரை ‘ஆதிதிராவிடர்’ என்ற வார்த்தைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் நீதிக்கட்சியினர்.
ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான்.  ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள்.
பல ஆண்டுகாலமாகவே அப்படித்தான் தங்களை அழைத்துக் கொண்டு வந்தனர். தாங்கள் ஆரம்பித்த அமைப்புகளுக்கும் அப்படியே பெயரிட்டு வந்தனர்.
வைரக்கண் வேலாயுதம்பிள்ளை, மதுரைப்பிள்ளை, க.அயோத்திதாசர் மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய சபைக்கு ஆதிதிராவிடர் மகாஜன சபை என்று பெயர். இது உருவாகிய ஆண்டு 1890.
athidravidan-issueயாழ்ப்பாணத்திலிருந்து 1907ல் வெளியான பத்திரிக்கையின் பெயர் ஆதிதிராவிட மித்திரன்.
1919ல் கொழும்பு -இலங்கையில் இருந்து வெளியான மற்றொரு இதழுக்கு ‘ஆதிதிராவிடன்’ என்ற பெயரே வைக்கப்பட்டது.
1917இல் இந்தியாவில் அரசியல் சீர்திருத்த விஷயமாக சென்னைக்கு வந்த செம்ஸ்போர்ட் பிரபு, மாண்டேகு பிரபுவிடம் ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயரைப் பற்றியும், ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு ஒரு விண்ணப்பம் தயாரித்து திரு. பி. வி. சுப்பிரமணிய பிள்ளை, திரு. வி. முக்குந்து பிள்ளை,  திரு. எம். சி. ராஜா, திரு. டி. ஓங்காரம், திரு. எம். சண்முகம்பிள்ளை, திருமதி. திருப்புகழ் அம்மாள், திரு. கே. முனுசாமி பிள்ளை, திரு. வி. இராஜரத்தினம்பிள்ளை, திரு. வி. பி. வாசுதேவப்பிள்ளை, திரு. வி. பி. வேணுகோபால்பிள்ளை ஆகியோர் கையொப்பமிட்ட விண்ணப்பம் இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (ஆதிதிராவிடர் வரலாறு, 1922, திரிசிராபுரம் ஆ.பெருமாள்பிள்ளை)
ஆதிதிராவிட மகாஜனசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக்குக் கொடுத்த கோரிக்கையிலே மக்கள் கணக்கெடுப்பிலும், மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் ‘பறையர் – பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்கு பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அப்போதைய சென்சஸ் அதிகாரி திரு.ஈட்ஸ் இதனை ஏற்கவில்லை. ஆனால் ஆதிதிராவிடர் மகாசபை பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக்கூட்டங்கள் போட்டு, தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது.
அப்படியானால் நடேசனாரின் பங்கு என்ன?
ஆதிதிராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சி.நடேச முதலியார் சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றிலே தாமாக முன்மொழிந்தார். ஆனால், நீதிக்கட்சியினரே முன்வந்து இதை செய்யவில்லை.
ஆனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் சொல்வதென்ன?
சி. நடேச முதலியாரே ஆதிதிராவிடர் என்ற பெயரை கண்டுபிடித்து வைத்ததுபோல எழுதுகிறார்கள். இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்கள் பேனாக்களில் மைக்குப் பதிலாக பொய்யை ஊற்றி எழுதுகிறார்கள்.
1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படிச் செய்தனர்.
m-c-rajaசட்டமன்றக்கூட்டமொன்றில் 1922 சனவரி 20ல் ஆதிதிராவிடர் எனும் பெயரை அரசாணையில் குறிப்பிட வேண்டும் எனும் தீர்மானத்தை எம்.சி.ராஜா முன்மொழிந்தார். ராவ்பகதூர் திரு. நம்பெருமாள் செட்டியார் வழிமொழிந்தார். சட்டமன்ற உறுப்பினரான எம்.சி. மதுரைப்பிள்ளை ஆதரித்துப் பேசினார்.
தீர்மானம் நிறைவேறியது. அந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அப்பெயரை அங்கீகரித்து அரசு உத்தரவிட்டது.
பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடரை சேர்த்ததற்கு யார் காரணம்?
பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க போராடி வெற்றி பெற்றது நீதிக்கட்சி ஆட்சியின் சாதனை என்று திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினருக்கு சாதகமாக எழுதுவதில் எத்தனை வெறித்தனம் இவர்களுக்கு?
இந்த வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.
பார்ப்பன ஆசிரியர்கள் எவ்வளவு வகுப்பு வெறுப்பைக் கக்குகிறார்கள் என்பதை சர் தியாகராயர் தமக்கேற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலம் விளக்கிக்கூறினார்.
1917 டிசம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டில் பேசுகையில் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
new-pachaiyappar1‘நான் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழுத் தலைவராக இருந்த சமயம். எனது சமீன்தார் நண்பர் ஒருவர், தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி, என்னைச் சிபாரிசு செய்யும்படிக் கேட்டிருந்தார்.
பார்ப்பனரல்லாத மாணவர்கள் இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதனால் அந்த மாணவருக்கு எப்படியும் ஒரு இடம் தர வேண்டும் என்று கடிதம் எழுதிப் பச்சையப்பன் கல்லூரித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைத்தேன். கல்லூரியில் எந்த இடமும் காலி இல்லை என்று குறிப்பிட்டு எனக்குப் பதில் வந்தது. அதற்குப் பின்னர் சில பார்ப்பன மாணவர்களுக்கு இடம் அளித்ததை நான் அறிந்தேன். இந்தச் சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தியிருக்கும்? பொதுவாக நான் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. அப்படித் தலையிடுவது தவறு என்றும் கருதி வந்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கும் விஷயத்தில் நான் கண்டிப்பான விதிமுறைகளை வகுத்தேன். என் அனுமதியின்றி, எந்த மாணவனையும் கல்லூரியில் சேர்க்கக்கூடாது என்று உத்தரவு போட்டேன்!’’
இவ்வாறு தியாகராயர் உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார்.
திராவிட இயக்க வரலாறு, கே.ஜி.மணவாளன், பக்.89-90
1926ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரியில் அனுமதியில்லை என்ற நிலை இருந்தது. இதை அப்போதே ரெட்டைமலை சீனிவாசனாரும் குறிப்பிட்டிருக்கிறார். ரெட்டைமலை சீனிவாசனார் தம் ஜீவிய சுருக்கம் என்ற நூலில் கூறுகிறார் :
‘‘ஆங்கிலேயர்கள் மட்டுமே கலந்துகொண்டு வெற்றி பெறுகிற வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், அந்த தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என பிரிட்டிஷ் பார்லிமென்டில் காங்கிரஸ் ஒரு மசோதா சமர்ப்பித்தது. பறையர் மகாஜன சபையார் சென்னை வெஸ்லியன் மிஷன் காலேஜ் ஹாலில் 1893ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி ஒரு பெருங்கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப்பங்கள் சேகரித்து ஜெனரல் சர் ஜார்ஜ் செஸ்னி  என்னும் பார்லிமெண்ட் மெம்பரிடம் சமர்ப்பித்தார்கள். அந்த மனுவில்,
‘வெளிஜில்லாக்களின் நாட்டுப்புறங்களில் ஜாதி வித்தியாசம் கட்டுப்பாடு இன்னும் முதன்மை பெற்று கொடுமையாய் நடக்கிறது. அறிவீனமான நாட்டுப்புறவாசிகள்தான் இப்படி நடந்து வருகிறார்களென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது மல்லாமல் இந்த ராஜதானியின் தலைநகரமாகிய சென்னையிலுள்ள பச்சையப்பன் கலாசாலை என்னும் சிரேஷ்ட வித்தியாசாலையிலும் பறையர், பறையர் பிள்ளைகளைச் சேர்க்கப்படாதென்று கட்டோடே விலக்கியிருக்கிறதும்….’’
ayothidhasar
– என்று பச்சையப்பன் காலேஜில் ஆதிதிராவிடரை சேர்ப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இதை அப்போதே அறிஞர் அயோத்திதாசர் குறிப்பிட்டு எதிர்த்திருக்கிறார்.
மகாகனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொதுச்சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி,   ‘சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும். சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை’ என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கிறார்கள்.  (தமிழன், சனவரி 6, 1909)
1917ல் பிராமணரல்லாத மாணவர்களை சேர்க்கச் சொன்ன நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயர் ஏன் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க சொல்லவில்லை? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் 1921ல் தியாகராயருக்கு இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
4.8.1921ல் சட்டமன்றத்தில் சௌந்தரபாண்டிய நாடார் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து முகமது உஸ்மான் சாகிபு தனது இஸ்லாமிய சகோதரர்களை கூட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கூறி, அவர் மேற்கொண்டு ஒரு கோரிக்கையை வைத்தார்.
image_110‘‘….இந்த மாநகரத்திலுள்ள பெரிய இந்து நிலையமாகிய பச்சையப்பன் கல்லூரி நான் சார்ந்துள்ள சமுதாயத்தினர்க்குத் திறக்கப்படுவதில்லை. இந்தச் சமயத்தில் இங்குள்ள மதிப்பிற்குரிய நண்பர்கள் சர்.பி.தியாகராயச் செட்டியார், திரு.ஓ.தணிகாசலம் செட்டியார் ஆகிய அக்கல்வி நிலையத்தின் அறங்காவலர்களை ஒரு தாராள மனப்பான்மை மேற்கொண்டு எல்லாச் சமுதாயத்தாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இங்கு வற்புறுத்த விரும்புகின்றேன்.’’
இந்த கோரிக்கைக்குப் பிறகாவது நீதிக்கட்சியின் தலைவர் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
இதுதான் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு போட்ட பட்டை நாமம். ஆனாலும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் தொடர்ந்து அதற்காகப் போராடினார்கள்.
இரட்டைமலை சீனிவாசனார் எழுதிய தன்னுடைய ஜீவிய சரிதத்தில் இவ்வாறு கூறுகிறார் :
‘‘ஜாதி இந்துக்கள் ஸ்தாபித்திருக்கும் ‘பச்சையப்பன்’ கலாசாலையில் பிள்ளைகளைச் சில காலத்திற்குப் பிறகு சேர்க்கவும் இம்மனுவே காரணம்’’
பச்சையப்பன் கல்லூரியில் எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தொடர்முயற்சியால் 21-11-1927ல் அனுமதி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களே போராடி வெற்றி பெற்ற உரிமைகளை நீதிக்கட்சியினர் தான் பெற்றுதந்தார்கள் என்று எழுதுவது அயோக்கியத்தனம் அல்லவா?

(தொடரும்)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக