பக்கங்கள்

திருக்குறள்

சனி, ஆகஸ்ட் 18, 2012

கண்ணதாசனின் வனவாசம், மனவாசம்


100-00-0000-234-1_b
வனவாசம்
ஆசிரியர்:  கண்ணதாசன்,  வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,  பக்கம்:  424, விலை: ரூ 140/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97

‘வனவாசம்’ புதிய முன்னுரை
காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.
உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது.
என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.
எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத் தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.
ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல!
மீசை முறைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.
‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி.
- கண்ணதாசன்,  26.04.1981

‘வனவாசம்’ முதற் பதிப்பின் முன்னுரை
சுயசரிதம் எழுதுகிறவனுக்கு இரண்டு பெருமைகள் வேண்டும்.
ஒன்று, அதை எழுதும்போது அவன் புகழ் ஓங்கி நிற்க வேண்டும்.
இரண்டு, அவன் வாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இருந்தால்தான் அவனது சரித்திரத்தைப் படிப்பதற்குச் சிலபேர் கிடைப்பார்கள்.
என்னைப் பொறுத்தவரை, என் புகழ் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசுகின்றதென்று நான் பெருமைப்பட முடியாது.
என் வாழ்வில் வியக்கத்தக்க சாதனை என்று எதுவும் இல்லை.
ஆயினும் எந்தத் துணிச்சலில் நான் சுயசரிதம் எழுதத்துவங்கினேன்?
இது கேள்வி!
நான் நடந்த வந்த பாதை, தனி வாழ்வில் நான் பட்ட துயரங்கள், இவையெல்லாம் ஒரு கதைபோல இருப்பதாக நான் கருதினேன்.
அதுவே, வேறு கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கதை எழுதுவதைவிட, என்னையே பாத்திரமாக்கி உண்மையைக் கதை வடிவில் சொல்ல நான் விரும்பினேன்.
அந்த முயற்சியே இந்த நூலாக எழுந்தது.
“நான்” என்ற எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே “அவன்” என்று என்னைக் குறிப்பிட்டேன்.
இதில், நான் பிறந்த கதை சொல்லவில்லை. அப்படியொன்றும் நான் அதிசயப்பிறவி அல்ல என்பதனால்.
நான் வளர்ந்த கதை சொல்லவில்லை, அப்படியொன்றும் நான் ராஜபோகத்திலோ, கொடிய ஏழ்மையிலோ வளர்க்கப்படவில்லை என்பதனால்.
நடுத்தரக் குடும்பத்தின் சாதாரண மகனுக்கு வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே கதை தொடங்குகிறது.
1943லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது.
சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன்.
சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.
எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது; ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது.
வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல்.
இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
சில ரசிகர்களுக்காக இந்தச் சரிதம் பலகாலம் காத்துக் கொண்டிருக்க நேர்ந்தாலும் நான் வருந்தமாட்டேன்.
ஏனென்றால், என் காலத்துக்குப் பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
இதில் நான் “வனவாசம்” என்று குறிப்பிடுவது ஓர் அரசியல் கட்சியில் நான் வாழ்ந்த வாழ்க்கையையே ஆகும்.
அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியதோடு வனவாசம் முடிந்துவிடுகிறது.
அடுத்த பகுதியை “மனவாசம்” என்ற தலைப்பில் எழுத நினைத்துள்ளேன்.
இந்த வனவாசத்தின் ஒரு பகுதி முதலில் தென்றலிலும் பிறகு இனமுழக்கத்திலும் வெளிவந்தது.
அந்த ஏடுகளுக்கும், அவற்றின் நிர்வாகிகளுக்கும் இதனை நூலாக வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றி.
- கண்ணதாசன், 4.9.1965



100-00-0000-234-2_b
 மனவாசம்
ஆசிரியர்:  கண்ணதாசன்,  வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,  பக்கம்:  240, விலை: ரூ 80/-
Dial For Books:  94459 01234, 9445 97 97 97

மனவாசம்
வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை.
உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா? ‘சுயசரிதம்’ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன்.
இந்த மனவாசம் 1961-ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன்.
நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன்.
என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால்… எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்….?
- கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக