பக்கங்கள்

திருக்குறள்

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

பழந்தமிழர் போர்க்கருவிகள்

:

1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு 8) கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம் 20) சதக்களி 21) தள்ளிவெட்டி22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி 25)புலிப்பொறி 26) குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி 30) குருவித்தலை 31) பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை 35) சிறுசவளம் 36) பெருஞ்சவளம் 37) தாமணி 38) முசுண்டி 39) முசலம் 40) வளரி

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக